தமிழ்மணம் விருதுகள் 2011 - அறிவிப்பு
இவ்வாண்டின் தமிழ்மணம் விருதுகள் நிகழ்வு குறித்து ஏற்கனவே அறிவித்திருந்தோம். ஆனால், அண்மையில் ஏற்பட்ட சில தவிர்க்க முடியாத நெருக்கடிகளால் நாங்கள் திட்டமிட்டிருந்தபடி விருதுகள் நிகழ்வை நடத்த இயலாதுள்ளது. பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் இது ஏமாற்றத்தை அளிக்கக்கூடும். அதற்காக எங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நெருக்கடிகள் தீர்ந்தபின் விருதுகள் நிகழ்வை ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடியே நடத்தும் ஒரு வாய்ப்பு இருப்பினும், வேறு சில மாற்றங்களுடனும் நடத்தலாம் என்றும் எண்ணுகிறோம். அல்லது நுட்ப ரீதியாகத் தமிழ்மணம் தளத்தின் வேறு மாற்றங்களினூடாக நல்ல பதிவுகளையும் ஆக்கங்களையும் ஊக்குவிக்க முடியுமா என்றும் சிந்தித்து வருகிறோம். இது குறித்துத் தக்க தருணத்தில் மேற்கொண்டு விவரங்களும் அறிவிப்புகளும் வெளியிடப்படும்.
புரிந்துணர்வுடன் கூடிய உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.
தமிழ்மணம் குழு
தமிழ்மணம் வலைப்பதிவு விருதுகள் – 2011
இவ்வாண்டின் மிகச்சிறந்த இடுகைகளை தெரிவு செய்யும் பதிவுத் திருவிழா
தமிழின் முண்ணனித் திரட்டியாக விளங்கும் தமிழ்மணம் ஆண்டுதோறும் வலைப்பதிவில் வெளிவரும் சிறந்த இடுகைகளை தேர்வு செய்து விருதுகள் வழங்கி வருகிறது. இந்த ஆண்டும், 2011ம் ஆண்டில் வெளிவந்த படைப்புகளுக்கான விருதுகளை வழங்கும், “தமிழ்மணம் வலைப்பதிவு விருதுகள் – 2011” நிகழ்வு வரும் டிசம்பர் மாதம் தொடங்கி பொங்கல் தினம் வரை நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் விருதுகள் நிகழ்வு 20 பிரிவுகளில் நடைபெறும். கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் பெண் பதிவர்கள் மட்டுமே பங்கு பெறும் பெண் பதிவர்களுக்கான ஒரு தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வலைப்பதிவுகளில் பெண் பதிவர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் பொருட்டே இந்தப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பதிவர்கள் வழங்கிய ஆலோசனைகளை கருத்தில் கொண்டு பெண் பதிவர்கள் 3 பொதுப் பிரிவுகளிலும், பெண் பதிவர்களுக்கான தனிப் பிரிவிலும் போட்டியிடும் வகையில் விதிமுறையில் மாற்றங்களை செய்திருக்கிறோம் (விரிவான விதிமுறைகள் கீழே வழங்கப்பட்டுள்ளது)
திரைப்படங்களைச் சார்ந்த இடுகைகளுக்கு ”திரைமணம் விருதுகள்” என்ற பெயரில் திரைமணம் தளம் மூலம் விருதுகள் வழங்கப்படும்.
தமிழ்மணம் விருதுகள் நிகழ்வு, பதிவர் வாக்கெடுப்பு, வாசகர் வாக்கெடுப்பு, நடுவர் குழு பரிசீலனை என மூன்று கட்டங்களாக நடைபெறும்.
விருதுகள் தேர்வு முறை
ஒவ்வொரு பதிவரும் தன்னுடைய பதிவே சிறந்தது எனப் பெருமிதம் கொள்ளும் உரிமையைப் பெற்றிருந்தாலும், இடுகைகளுக்கு உடனுக்குடன் கிடைக்கும் சக பதிவர்கள்/வாசகர்களின் பின்னூட்டங்கள் மூலமான அங்கீகாரமும் பதிவர்களை மேலும் ஊக்குவிக்கும் சக்தியாகத் திகழ்கிறது. அப்படிப்பட்ட இடுகைகளை வாசகர்கள் மீண்டுமொருமுறை திரும்பிப் பார்க்க வைத்து அங்கீகரிப்பதே இந்த விருதுத் தேர்வுக்கான அடிப்படை. அறிவிக்கப்பட்ட போட்டிகளுக்காக எழுதப்படும் படைப்புகளாக அல்லாமல், தன்னெழுச்சியாக வெளிப்பட்ட படைப்புகளே இந்தத் தேர்வுகளுக்கு கணக்கிலெடுக்கப்படுவதால் இதில் போட்டியோ, ஏமாற்றமோ ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்குமென்றே நம்புகிறோம்.
இவ்வாண்டின் தேர்வுகள் கீழ்காணும் பிரிவுகளில் இருக்கும்:
1. படைப்பிலக்கியம் (கதை, கவிதை, போன்றவை)
2. காட்சிப் படைப்புகள் (ஓவியம், புகைப்படங்கள் போன்றவை)
3. நூல் விமர்சனம், அறிமுகம்
4. அறிவியல், விவசாயம், சுற்றுச்சூழல், மருத்துவம், தொழில்நுட்பக் கட்டுரைகள்
5. பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள்
6. செய்திகள்/நிகழ்வுகளின் அலசல்கள்
7. அரசியல், சமூக விமர்சனங்கள்
8. பெண்கள் பிரச்னைகள், திருநங்கைகள் வாழ்வியற் சிக்கல்கள்
9. தலித் மக்களின் பிரச்சனைகள், மனித உரிமை, நிறவெறி (Racism) தொடர்பான கட்டுரைகள்
10. ஈழ மக்களின் வாழ்வியல், மனித உரிமை, சமூக, பொருளாதாரச் சிக்கல்கள்
11. தமிழ் மொழி, கலாச்சாரம், வரலாறு, தொல்லியல்
12. நகைச்சுவை, கார்ட்டூன்
13. சுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம்
14. பொருளாதாரம், வணிகம் தொடர்பான கட்டுரைகள்
15. தமிழ்க்கணிமை, தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் இணையம் தொடர்பான கட்டுரைகள்
16. விளையாட்டு, உடல் ஆரோக்கியம், உடல்நலம் மற்றும் சமையல் தொடர்பான கட்டுரைகள்
17. பெண் பதிவர்கள் மட்டும் பங்கு பெறும் பிரிவு – எந்த இடுகைகளாகவும் இருக்கலாம்
18. தமிழிசை, நடனம், தமிழ் கிராமியக் கலைகள் தொடர்பான கட்டுரைகள்
இந்த 18 பிரிவுகள் தவிர சிறந்த சினிமா இடுகைகளுக்கான திரைமணம் விருதுகள் கீழ்க்காணும் பிரிவுகளில் வழங்கப்படும்.
19. திரைப்பட விமர்சனங்கள் – தமிழ் சினிமா விமர்சனங்கள்
20. உலக சினிமா விமர்சனங்கள், குறும்படங்கள், திரைப்படக்கலை, மாற்று சினிமா தொடர்பான படைப்புகள்
தேர்வு நடைமுறை:
1. தனிப்பட்ட இடுகை (post) அல்லது இடுகைத் தொடர்களே விருதுக்கு தேர்வு செய்யப்படும். வலைப்பதிவு முழுமைக்குமான விருது என்று எதுவும் இல்லை.
2. டிசம்பர் 1, 2010 முதல் நவம்பர் 30 2011 வரை எழுதப்பட்ட இடுகைகள் மட்டுமே விருதுகள் தேர்வுக்கு இடம்பெறும்
3. எந்தவொரு இடுகையையும் எழுதிய பதிவரே பரிந்துரை செய்யவேண்டும். ஒரே பதிவர் அதிகபட்சமாக மூன்று வெவ்வேறு பிரிவுகளுக்குப் பரிந்துரை செய்யலாம். ஆனால் ஒரு பிரிவுக்கு ஒரே ஒரு இடுகையை மட்டுமே பரிந்துரை செய்ய முடியும். மேலும் குறிப்பிட்ட இடுகையை ஒரு பிரிவுக்கு மட்டுமே பரிந்துரை செய்யலாம். பெண் பதிவர்கள் மூன்று பிரிவுகள் தவிர பெண் பதிவர்களுக்கான தனிப் பிரிவிலும் போட்டியிட முடியும்
4. உங்களது பரிந்துரைகளை அளிப்பதற்கென ஒரு சிறப்புத்தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான சிறப்புத் தொடுப்பும் வழிமுறைகளும் தமிழ்மணத்தில் பதியப்பட்டுள்ள பதிவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.
5. பரிந்துரைக்கப்படும் படைப்புகள் 2011 ஆம் ஆண்டில் முதல் முறையாகப் எழுதப்பட்டிருக்கவேண்டும். பரிந்துரைகள் 2011 ஆண்டில் வெளியிடப்பட்ட முந்தைய ஆண்டுகளின் படைப்புகளின் மீள்பதிவுளாக இருத்தலாகாது.
6. தமிழ்மணம் விருதுத் தேர்வுகள் மூன்று கட்டமாக நடைபெறும்.
7. தமிழ்மணத்தின் முதற்கட்ட வாக்கெடுப்பு வலைப்பதிவர்களுக்கானது. தமிழ்மணத்தில் பதிவு செய்துள்ள வலைப்பதிவர்கள் அனைவரும் வாக்களிக்கலாம். ஒரு பதிவருக்கு ஒரு பிரிவுக்கு ஒரு வாக்கு என்னும் அடிப்படையில் வாக்குரிமை இருக்கும்.
8. இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு வாசகர்களுக்கானது. முதற்கட்ட வாக்கெடுப்பில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 10 இடங்கள் பெறும் இடுகைகள் இரண்டாம் கட்டப் பொது வாக்கெடுப்புக்குத் தெரிவு செய்யப்படும். இரண்டாம் கட்டத்தில் அனைத்து வாசகர்களும் (பதிவு இல்லாதவர்களும்) வாக்களிக்கலாம்.
9. பதிவர் வாக்குகளும் வாசகர் வாக்குகளும் 2:1 என்ற விகிதத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு மொத்த வாக்குகள் கணக்கிடப்படும். இதில் தேர்வு பெறும் முதல் 5 இடுகைகள் மூன்றாம் கட்ட நடுவர் குழுவின் பரிசீலனைக்கு தேர்ந்தெடுக்கப்படும்.
10. தமிழ்மணம் நிர்வாகம், வலைப்பதிவர்களைக் கொண்ட நடுவர் குழு அமைக்கப்படும். கடந்த ஆண்டு பதிவர்களை நடுவர்களாக நியமிப்பது குறித்து சில மாறுபட்ட கருத்துக்களை சில பதிவர்கள் முன்வைத்து இருந்தாலும் நடைமுறையில் சாத்தியமான நடைமுறைகளையே தமிழ்மணம் பயன்படுத்த விரும்புகிறது. காரணம் விருதுகள் நிகழ்வு ஒரு நீண்ட நிகழ்வு. எனவே நடைமுறை சாத்தியமான நடைமுறைகளையே தமிழ்மணம் பின்பற்றும்.
11. அதே நேரத்தில் விருதுகள் ஒரு இடுகையின் தகுதி அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக நடுவர் குழுவுக்கும் சில விதிமுறைகளை உருவாக்கி இருக்கிறோம். நடுவர் குழுவில் இடம் பெறும் நடுவர்கள் தனித்தனியாக இடுகைகளை தேர்வு செய்து தமிழ்மணம் விருதுக்குழுவிற்கு அளிப்பார்கள்.
தமிழ்மணம் விருதுக் குழு இந்த மூன்று சுற்று வாக்குகளையும் கணக்கில் கொண்டு விருதுகளை அறிவிக்கும். நடுவர்களின் பெயர்கள் இறுதிவரை அறிவிக்கப் படமாட்டாது. விருதுகள் அறிவிக்கப்படும் பொழுது தான் நடுவர்களின் பட்டியில் வெளியிடப்படும். ஆனால் யார் யார் என்ன பிரிவில் நடுவர்களாக இருந்தார்கள் என்ற விபரம் அறிவிக்கப்படமாட்டாது. ஒருபிரிவுக்குள்ளேயும் கூட ஒரு நடுவருக்கு, மற்ற நடுவர்கள் யார் என்பது தெரியது.
12. நடுவர் குழுவில் இடம் பெறும் வலைப்பதிவர்களும் போட்டியில் கலந்து கொள்ளலாம். ஆனால் அவர்கள் கலந்து கொள்ளும் பிரிவில் விருதுகளை தேர்வு செய்ய இயலாது.
13. தமிழ்மணத்தில் இணைந்துள்ள பதிவர்களுக்குப் பரிந்துரைகள் அனுப்புவதற்கான வேண்டுகோள் வெளியிடப்படுவதுடன் விருது தெரிவுப் பணி தொடங்கும்.
14. கிழ்க்கண்ட தேதிகளை பதிவர்கள் குறித்துக் கொள்ளலாம்
- இடுகைகள் பரிந்துரைகளுக்கான காலக்கட்டம் – டிசம்பர் 1 – டிசம்பர் 10
- முதல் கட்ட வாக்கெடுப்பு – டிசம்பர் 11 – டிசம்பர் 20
- இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு – டிசம்பர் 21 – டிசம்பர் 30
- நடுவர் குழு வாக்கெடுப்பு – சனவரி 1 – சனவரி 10
- விருதுகள் முடிவுகள் அறிவிப்பு – பொங்கல் தினத்தன்று முடிவுகள் அறிவிக்கப்படும்
15. ஒவ்வொரு கட்டத்திலும் விரிவான அறிவிப்புகள் தமிழ்மண முகப்பில் வெளியிடப்படும். மின்னஞ்சலிலும் பதிவர்களுக்கு அறிவிக்கப்படும்.
பரிசு:
தமிழ்மணம் விருதுகள் சிறந்த எழுத்தினை ஊக்குவிக்கவே நடத்தப்படுகிறது. பரிசுத் தொகை ஒரு அடையாளத் தொகை மட்டுமே. அந்த அடையாளத்தை புத்தகங்களாகவே தமிழ்மணம் வழங்கும். வாக்கெடுப்பில் ஒவ்வொரு பிரிவிலும் அதிக வாக்குப் பெற்று முதலிடம் பெறும் பதிவுகளுக்குத் தலா ரூ.1000ம் (ஆயிரம் ரூபாய்), இரண்டாம் இடம் பெறும் பதிவுகளுக்குத் தலா ரூ.500ம் (ஐநூறு ரூபாய்) வழங்கப்படும். பரிசுத்தொகை நூல்களாகவே வழங்கப்படும். பதிவர்கள் தமிழ்மணம் வழங்கும் கூப்பனைக் கொண்டு சென்னை நியூ புக்லாண்ட்ஸ் புத்தகக்கடையில் தாங்கள் விரும்பும் நூல்களைப் பெற்றுக் கொள்ளலாம்
தமிழ்மணம்/திரைமணம் விருதுத் தேர்வு ஒருங்கமைப்புக் குழு
டி.எம்.ஐ.யின் வருங்காலப் பயணம்
இந்த வாரம் நட்சத்திரப் பதிவுகளில் தமிழ் மணத்தைப் பற்றியும், டி.எம்.ஐ. நிறுவனத்தைப் பற்றியும் சில தலைப்புகளில் உங்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டோம். பின்னூட்டங்கள் வாயிலாக கருத்துக்களையும், ஆலோசனைகளையும், விமர்சனங்களையும் நல்கிய பதிவர்கள் அனைவருக்கும் எங்களது நன்றி.
நாங்கள் நட்சத்திரவார முதல் இடுகையில் கூறியபடி பல்வேறு சவால்களுக்கும், நேரப்பற்றாக்குறைக்குமிடையே தமிழ்மணத்தின் சேவையை மேலும் எவ்வளவு செம்மைப்படுத்த முடியுமோ, அவற்றுக்கான முயற்சிகளைத் தொடர்வோம். தொழில்நுட்ப அடிப்படையிலான மாற்றங்கள் பெரும்பாலான பதிவர்களையும் வாசகர்களையும் மனதில் வைத்தே செய்யப்படுகின்றன. சில நேரங்களில் தமிழ்மணம் நிர்வாகத்துக்கு வரும் மின்னஞ்சல்களில் வைக்கப்படும் பயனான வேண்டுகோள்களின் அடிப்படையிலும் மாற்றங்களைச் செய்ய முன்வந்தது. ஆனால், தொழில்நுட்ப மாற்றங்கள் இயன்றவரை மனிதத்தலையீடு இல்லாமலே தானியங்கியாகச் செயற்படுத்தப்படுகிறன. சில மாற்றங்கள் பதிவர்கள் சிலருக்குப் பிடித்தமற்றவையாகவிருக்கலாம். சில மாற்றங்கள் நிரந்தரமானதாக அல்லாமல் பரிசோதனை முயற்சிகளாகவும் இருக்கலாம். எம்மாற்றத்தையுமே வலைப்பதிவுகளில் ஒரு சிலர் தவறுதலாகப் புரிந்து கொள்ளக்கூடிய அபாயமிருந்து வருவதால் இயன்றளவு அனைத்துத்தரப்பினரையும் திருப்திப்படுத்த ஏதாவது செய்ய முடியுமா என்று சிந்தித்தே மாற்றங்களைச் செய்கிறோம். இதற்காக உழைக்கும் எங்கள் தொழில்நுட்பக்குழுவைச் சேர்ந்தவர்கள் பெரிதும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
அடுத்தபடியாக, பதிவரும் பயனரும், நிர்வாகத்தைப் பற்றியும் நாங்கள் முகங்கொடுக்கவேண்டிய சவால்களையும், அவற்றை எப்படி நாம் வகுத்துக்கொண்ட நெறிக்கோவையின் அடிப்படையில் எதிர்கொள்கிறோம் என்றும் இடுகைகளில் எடுத்துரைத்தோம். இங்கும் மேலே தடித்த எழுத்துகளில் சொல்லியவற்றையே மீண்டும் வலியுறுத்த விரும்பிகிறோம். மேலும், எங்களுடைய முழுநேரத்தொழிலுக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்குமிடையே எங்களாலியன்ற அளவு நேரத்தைச் செலவிட்டு, பயனர் நிர்வாகத்துக்கு வரும் மின்னஞ்சல்களுக்குக் இயன்றளவு விரைவாகவே பதில் அளிக்கிறோம். எங்கள் தளத்தின் உதவிப்பக்கங்களில் சில பயனுள்ள தகவல்கள் வைக்கப்பட்டிருப்பதால், உங்கள் மற்றும் எங்கள் நேரம் கருதி அவற்றை முதலில் படித்துவிட்டு பயனில்லையெனில், எங்களுக்கும் அஞ்சல் அனுப்புங்கள்.
அடுத்து, உங்கள் பதிவுகளிலும், மின்னஞ்சல் முகவரி போன்ற தனிப்பட்ட தகவல்களிலும் மாற்றமிருந்தால் அவற்றைப் பற்றி உடனடியாக எங்களுக்குத் தெரிவியுங்கள். இல்லாவிட்டால் சில நேரங்களில் அதனாலேயே சிக்கல்கள் ஏற்படுவதுண்டு. எடுத்துக்காட்டாக சில பதிவர்களுக்கு தமிழ்மணம் விருது பற்றியோ, நட்சத்திர அழைப்புக்கோ அனுப்பிய மின்னஞ்சல்கள் திரும்பி வந்திருக்கின்றன. பதிவர்கள் தங்கள் பதிவுகளை தமிழ்மணத்துடன் இணைந்த காலத்தில் கொடுத்த மின்னஞ்சல் முகவரிகளே எங்களுடைய தரவுப்பட்டியலில் இருக்கின்றபடியால், அவை தவறானவையென்றால் எங்களால் வேறு வழிகளில் உங்களைத் தொடர்பு கொள்ள இயலாது.
இவ்வாரம் தமிழ்மணத்தில் திரட்டப்படும் பதிவுகளை வகைப்படுத்துவதையும் வடிகட்டுவதையும் பலரும் வரவேற்றிருப்பது நிறைவானதாக இருக்கிறது. இச்சீரமைப்பொன்றும் புது வழிமுறையல்ல. ஏற்கனவே வகுக்கப்பட்டதுதாம். திரைப்படம் சார்ந்த பதிவர்களின் சொந்தக்கருத்துகளுடனான பதிவுகளைத் திரட்டத் திரைமணத்தினைத் தமிழ்மணம் தந்திருக்கையிலே, திரைப்படத்துக்கென ஒரு பதிவினை உருவாக்கித் திரைமணத்திலே சேருங்கள். தமிழ்மணத்திலே திரைப்பட இடுகைகளைச் சேர்க்கும்போது, அவை தானியங்கித்தேர்வினாலே தாமாகவே முகப்பிலே தோன்றாமற்போகும். ஆங்கில இடுகைகளுக்கும் அதே தோன்றாத நிலையோ, தோன்றினால், விலக்கப்படும் நிலையோதான் உண்டு.
வெட்டி ஒட்டும் பதிவுகள், சாதி/மத/சோதிட/அரசியற் கொள்கை பரப்புப்பதிவுகள், தனிமனிதத்தாக்குதற்பதிவுகள் போன்றவற்றை எக்காரணத்தினாலும் தமிழ்மணம் ஆதரிக்காது. இவற்றை உணர்ந்து பதிவர்கள் தாமே தக்க பதிவுகளைமட்டும் தமிழ்மணத்திலே இணைத்தால் இவற்றைக் கண்காணிக்கவோ நடவடிக்கை எடுக்கவோ தமிழ்மணத்துக்கு அவசியமில்லை. அதே சமயம் தனியாட்கருத்துச் சுதந்திரத்திலே தலையிடவோ தடையிடவோ தமிழ்மணத்துக்கு விருப்பமும் உரிமையுமில்லை. சமூகத்தின் பல திசைகளிலிருந்தும் கருத்துக்களும் குரல்களும் ஒடுக்கப்படாமல் ஒலிக்கத் தமிழ்மணம் தளத்தை அமைத்துக்கொடுக்கவேண்டும் என்பதே எங்கள் செயற்பாடுகளுக்கான ஒரே உந்துதல்.
மேற்சொன்ன இரு நோக்குகளும் சமயத்தே எதிரெதிர்த்திசைகளிலிருந்து வருவதைப்போலத் தோன்றினாலும், ஒன்றோடொன்று முரண்படாமலிருக்கக்கூடிய ஒன்றுதானெனத் தமிழ்மணம் நம்புகிறது. மிகச்சில சந்தர்ப்பங்களிலே இடுகைகளின் உள்ளடக்கங்களாலே இந்நோக்குகளிலே குழப்பம் நேரலாம். அவற்றைமட்டும் தனியே பரிசீலித்து தமிழ்மணத்துக்கு ஏற்புடைய இடங்களில் ஏற்றும், ஏற்பில்லா இடங்களில் விலக்கியும் செயற்பட விழைகிறோம்.
மேலும், தம்கருத்துகளைப் பதிவர்கள் பதிவிடுவதைத்தான் தமிழ்மணம் ஊக்குவிக்கின்றது; உரிமை பெறாத படங்களைத் தொகுப்பாக்கியோ, கருத்துகளை அப்படியே பிற இடங்களில் இருந்து வெட்டி ஒட்டியோ வரும் பதிவுகளைக் கடந்தகாலத்திலே அவ்வப்போது அகப்பட்டபோது நீக்கிக்கொண்டிருந்தாலுங்கூட, இவ்வாரம் ஒவ்வொன்றாகத் தேடி முடிந்தவரை விலக்கிக்கொண்டிருக்கிறோம். ஒவ்வோர் இடுகையையும் எங்களாலே பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்பதால் இவ்விடத்தில் பதிவர்களும் பயனர்களும் இருகண்களாக இருந்து தெரிவிக்கக் கோருகிறோம். தமிழ்மணத்தின் சிறப்பிற்கு டி.எம்.ஐ நிர்வாகக் குழுவினர் மட்டுமன்றி, பதிவர்கள், வாசகர்கள் அனைவரும் காரணமே. இவ்வாரத்திற்கூட சில பதிவர்கள் இப்படியான வெட்டி ஒட்டுப் பதிவுகளைத் தக்க ஆதாரங்களுடன் பதிவர்கள் சுட்டிக்காட்டியபோது அவற்றை உடனடியாக நீக்கினோம். எப்போதாவது ஒன்று என்றுங்கூட பிறரின் உரிமைபெற்ற படைப்புகளை வெட்டி ஒட்டுதலையோ பிடிஎப் வடிவத்திலோ எம்பி3 ஒலியவடிவிலோ தமிழ்மணத்திலே இணைப்பதை நாங்கள் ஆதரிக்கவில்லை; ஆதரிக்கவும்முடியாது. தகவற்சேகரிப்பிற்கு, பரப்பலுக்கு என்னும் சப்பைக்காரணங்களைத் தமிழ்மணத்திலே தம்பதிவுகளை இணைக்கப் பதிவர்கள் விரும்பும்போது ஏற்றுக்கொள்ளமுடியாது. படைப்புரிமையும் பதிப்புரிமையும் அறிவுச்சொத்துரிமையும் சட்டப்படி வரையறுக்கப்பட்ட காலம்வரைக்கும் அவற்றின் உரிமையாளருக்கானதுமட்டுமே. பிறர் படைப்புகளின் தேவையான சுருக்கமான சில பகுதிகளைமட்டும் மேற்கோள்காட்டி தகுந்த உசாத்துணைகளுடன் அவை சார்ந்த கருத்துக்கள், எதிர்வினைகள், திறனாய்வுகள் என்று வருகின்ற பதிவுகளைப் பற்றிய கருத்தல்ல இது. அப்படியான இடுகைகள் முற்றிலும் தமிழ்மணத்துக்கு ஏற்புடையவையே. இதனால், தொடர்ந்தும் பதிவர்கள், இப்படியாக ஒத்தி-ஒட்டப்படும் இடுகைகள், காப்புரிமையுள்ள நூல்களின் பிடிஎப் கோப்புகள், காப்புரிமையுள்ள பாடல்களின் ஒலியிழைகள் இவற்றினைத் தமிழ்மணத்திலே திரட்டப்பட்டிருக்கும் பதிவுகளிலே கண்டால், இடுகையின் முகவரி, மூலப்படைப்பின் இணைய முகவரி அல்லது உரிமை இவற்றினைத் தமிழ்மணத்துக்கு இலகுவாகச் சுட்டிக்காட்ட வசதி செய்யமுயற்சிக்கிறோம். அதுவரை, எமக்கு மின்னஞ்சலினாலே அறியத்தாருங்கள்.
இவை தவிர, தமிழ்மணத்தின் மீது ஆதாரமற்ற வெறுமையான அவதூறாகவும் பிற பதிவர்களின் மீது தனியாள் தாக்குதலுமாக அமைந்த காரணத்திற்காகவும் சில பதிவுகளை நீக்கி இருக்கிறோம் என்பதையும் குறிப்பாகத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்மணத்தின் நுட்ப மற்றும் செயற்பாட்டுக் குறைகளைச் சுட்டிக் காட்டுவதையும் விமர்சிப்பதையும் நாங்கள் என்றுமே தவறாக எடுத்துக் கொண்டதில்லை. சில சமயம் அவை தமிழ்மணத்தினை மேம்பாடாக்க எமக்கு உதவுவதால் அவற்றைக் கருத்திற் கொண்டு செயல்படுகிறோம். சில சமயம் அவை நடைமுறைக்கு ஏற்புடையதல்ல எனப்பட்டால், நிராகரித்து விடுகிறோம். ஆனாலும், அவற்றைச் சொல்லும் உரிமை பிறருக்கு உண்டு என்பதை ஏற்றுக் கொள்கிறோம். அதே சமயம், மறுப்பதின் காரணத்தினாலேயே தமிழ்மணத்தின் நோக்கங்களையே சந்தேகிக்கும்படியான கட்டுக்கதைகளைப் புனைவதையும் ஆதாரமின்றி அவதூறு செய்வதையும் ஏற்க மறுக்கிறோம்.
சொந்த நேரத்தையும் பொருளையுமிட்டுத் தன்னார்வத்தொண்டாக இலாப நோக்கற்ற அமைப்பாகச் செயற்பட்டு வருகையில், அதனையும் தொடர்ந்து செய்ய ஏற்பட்ட சிரமங்களின் காரணமாகப் பிறரிடம் எந்தக் கட்டாயங்களுமின்றித் தன்விருப்ப நன்கொடைகள் பெற்றுக் கொள்ளப் ஆண்டுகள் இத்தனை கழித்தே முடிவு செய்தோம். தமிழ்மணத்தின் வேண்டுகோளை ஏற்று நிதி அனுப்பிவைத்த பதிவர்கள், பயனர்கள், நலம்விரும்பிகள் அனைவருக்கும் எம் நெஞ்சார்ந்த நன்றியை இவ்விடத்திலே தெரிவித்துக்கொள்கிறோம். நிதி அனுப்பிய ஒவ்வொருக்குமான பெற்றுக்கொண்டதை உறுதிப்படுத்திய நன்றி அஞ்சல் (தொகை உள்ளிட்டு) இயலுமானவரை உடனுக்குடன் அனுப்பியிருந்தோம். அவ்வாறு யாரேனும் உறுதிப்படுத்தும் அஞ்சல் பெற்றிராவிட்டால், தயைகூர்ந்து தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு மின்னஞ்சல்மூலம் அறியத்தாருங்கள்.
விளம்பரங்களையும் தமிழ்மணத்தின் நோக்கங்களுக்கு முற்றிலும் முரணாகவோ, வாசக அனுபவத்திற்குக் குறையுண்டாகும்படியோ இல்லாவிடத்திலே ஏற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறோம். இச்சூழலில், தமிழ்மணம் பொருளீட்டுவதையே முதன்மையாகக் கொண்டிருக்கிறதெனும்படியான அவதூறைப் பரப்பிக்கொண்டிருக்கும் பதிவுகளை நீக்கவேண்டிய அவநிலையேற்படுகின்றது.
பல காலமாகப் பதிவுலகில் சச்சரவுகளுக்குக் காரணமாக இருந்தாலும், தமிழ்மணமும் அதன் நிர்வாகிகளும் அந்நிகழ்வுகளின் காரணமாகத் தேவையின்றி தாக்குதல்களுக்கு உள்ளானபோதிலும், ஓரளவிற்கு அஃது பதிவரின் தனியாள் சுதந்திரம் என்று பொறுத்தே வந்திருந்தாலும், அண்மையில், சில பதிவர்களைப் பிராடு, போலி என்பது போன்றும், இன்னும் பல வழிகளாலும் தனியாட்கள்மீது தாக்குதல் செய்தும், தமிழ்மணத்தின் விளம்பரப் பதிவுகள் சிலவற்றைப் பற்றி எந்த அடிப்படையும் இன்றி உள்நோக்கம் கற்பிக்கும் வண்ணம் தவறான கருத்தையும் அவதூறையும் பரப்பும் பதிவுகளையும் நீக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம். மீண்டும், குறைகளைச் சுட்டிக் காட்டுவதையோ, ஆலோசனைகள் சொல்வதையோ நாங்கள் எக்காலத்திலும் எவ்வகையிலும் எதிர்க்கவில்லை; வரவேற்கிறோம். ஆனால், காரணமற்ற அவதூறுகளை எதிர்கொள்ளவும், தொடர்விளக்கம் சொல்லவும், எங்களுக்கு விருப்பமில்லை; நேரமில்லை. சரியான புரிந்துணர்வற்ற நிலையிலே தொடர்ந்திருப்பதைவிட விலகி/விலக்கி விடுதல் நல்லது.
மேலும் எமது புதிய திட்டங்களை அவ்வப்போது இப்பதிவிலே வெளியிட்டு, உங்கள் கருத்துகளையும் கேட்டு மேற்கொண்டு எம் பணி தொடரும்.
இறுதியாக, உங்கள் அனைவரின் ஊக்கமும், ஒத்துழைப்பும் தேவை என்று கூறி டி.எம்.ஐ. இந்த கருத்துப் பரிமாற்றத்தைத் தற்போதைக்கு நிறைவு செய்கிறது. அனைவருக்கும் நன்றி!
தொடரும் தங்கள் புரிந்துணர்வுக்கு நன்றி.
தமிழ்மணத்திற்கு நன்கொடை
தமிழ்மணம் செயல்பட்டு வந்த வழங்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தமிழ்மணம் இணைய தளத்தின் தறவிறக்கம் கடந்த சில வாரங்களாக, மிகவும் தாமதமாக இருந்து வந்தது. இந்தப் பிரச்சனையை தற்பொழுது சரி செய்திருக்கிறோம். இன்னும் சில பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் இது முழுமையடையும் என்று நம்புகிறோம். தமிழ்மணத்தின் தற்போதைய பிரச்சனைகள் களையப்பட்டு மீண்டும் ஒரு சிறப்பான சேவையை அளிக்க முடியும் என உறுதியளிக்கிறோம். அது வரை தற்போதைய சிரமங்களுக்கு பொறுத்தருள பதிவர்கள், வாசகர்களிடம் வேண்டுகிறோம்
வழங்கிச் செலவுகள் அதிகரித்து வரும் சூழலில், விளம்பரங்கள் மட்டுமே தமிழ்மணத்தின் வழங்கிச் செலவுகளை ஈடுசெய்யக்கூடியதாக இல்லை. இதன் காரணமாக, கடந்த ஏழு ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தமிழ்மணம், முதன்முறையாக நன்கொடையை எதிர்நோக்குகிறது.தமிழ்மணம் தமிழின் முதன்மையான வலைத்திரட்டி ஆகும். வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத வகையில் வலைப்பதிவுகள் சார்ந்த பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக்கிய தளமாக தமிழ்மணம் கடந்த 7 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தமிழ்மணத்தை லாப நோக்கு இல்லாத நிறுவனமாக செயல்பட்டு வரும் தமிழ் மீடியா இண்டர்நேஷனல் நிறுவனம் நடத்தி வருகிறது.
தொடர்ச்சியாக வளர்ந்து வரும் தமிழ் வலைப்பதிவுகளுக்கு தடையில்லாத தரமான சேவையை வழங்க நன்கொடைகளை எதிர்பார்க்கிறோம். நன்கொடைகளை பேபால் மூலமாக செலுத்தும் வசதியினை ஏற்படுத்தியிருக்கிறோம்
நன்கொடை அளிக்க இந்தப் பக்கத்திற்கு செல்லுங்கள் - http://www.tamilmanam.net/tamilmanam_donate.php
புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி…
நிர்வாகம்
தமிழ்மணம்
தமிழ்மணம் பதிவுப்பட்டை (Toolbar)
வலைப்பதிவுகளில் எழுதப்படும் இடுகைகளை உடனுக்குடன் தமிழ்மணத்திற்கு அளிக்கவும், மறுமொழிகளை உடனுக்குடன் திரட்டவும், வாசகர் பரிந்துரைக்காக வாசகர்களிடம் இருந்து வாக்குகளை திரட்டவும் பதிவுப்பட்டைச்சேவையை தமிழ்மணத்தின் ஆரம்ப காலத்திலிருந்தே வழங்கி வந்துள்ளோம். உடனுக்குடன் மறுமொழிகளும், இடுகைகளும் வலைப்பதிவுகளில் இருந்தே ஒரு சொடுக்கிலே தமிழ்மணத்தின் முகப்பிற்கு வந்தடையும் தொழில்நுட்பம் தமிழ்மணத்தின் சிறப்பம்சமாகவும் இருந்து வந்துள்ளது.
ஆனால், இன்றைக்கு வலைப்பதிவுகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்ட நிலையில் ஒவ்வொரு வலைப்பதிவும் வாசிக்கப்படும் பொழுதும் பதிவுப்பட்டை சேவை தமிழ்மணத்தின் வழங்கிக்கு அழுத்தத்தைக் கொடுக்கிறது. அது தவிர வலைப்பதிவுகளிலே தரவிறக்கமும் தாமதமாகிறது. இப்பிரச்சனை தமிழ்மணம், வலைப்பதிவர்கள் என அனைவரையும் பாதிக்கும் நிலையில், இச்சேவையை இடைநிறுத்தத் தமிழ்மணம் நிர்வாகம் தள்ளப்பட்டிருக்கின்றது.
இச்சேவையில் உள்ள பிரச்சனைகள் களையப்பட்டு மேலும் மேம்படுத்தப்பட்ட சேவை வரும் வரையில் வாசகர் பரிந்துரை, மறுமொழிகள் திரட்டுதல் போன்ற சேவைகள் இயங்காதெனத் தெரிவித்துக் கொள்கிறோம். விரைவில் இந்த சேவைகள் மீண்டும் செயற்படத் தொடங்கும்.
இதனால், பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் ஏற்படும் சிரமத்திற்கு வருந்துகிறோம்.
புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி
நிர்வாகம்
தமிழ்மணம்
தமிழ்மணம் விருகள் 2010 – பரிசு கூப்பன்
தமிழ்மணம் விருதுகள் 2010 நிகழ்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுக் கூப்பனை மின்னஞ்சலில் அனுப்பி இருக்கிறோம். இதனைக் கொண்டு சென்னை நியூ புக்லாண்ட்ஸ் புத்தகக் கடையிலும், நூல் உலகம் இணையத்தளத்திலும் (http://www.noolulagam.com/) புத்தகங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
நியூ புக்லாண்ட்ஸ் புத்தகக் கடைக்கு செல்லும் பொழுது மின்னஞ்சலை அச்சு எடுத்து செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம். வெளியூரில் இருந்தால் நியூ புக்லாண்ட்ஸ் புத்தகக் கடையை தொடர்பு கொண்டு அஞ்சல் மூலமாக புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம்.
புரிந்துணர்வுடன் தொடரும் உங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி…
நிர்வாகம்,
தமிழ்மணம்
தமிழ்மணம் விருதுகள் 2010 – முடிவுகள்
தமிழ்மணம் பதிவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் எங்கள் பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த இனிய தமிழர் திருநாளில் தமிழ்மணம் விருதுகள் 2010 முடிவுகளை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த விருதுகள் நிகழ்வு வலைப்பதிவுகளில் நல்ல ஆக்கப்பூர்வமான எழுத்துக்களை வளர்க்கவும், ஊக்குவிக்கவுமே வழங்கப்படுகின்றன. வரும் ஆண்டுகளில் அத்தகைய எழுத்துக்கள் வலைப்பதிவுலகில் பெருகும் என நம்புகிறோம்.
2010ம் ஆண்டு விருதுகள் தமிழ்மணம் விருதுகளின் 3வது நிகழ்வு ஆகும். ஒவ்வொரு ஆண்டும் பதிவர்களும், வாசகர்களும் ஆர்வத்துடன் பங்கேற்பது வலைப்பதிவுகளின் வளர்ச்சியையே காட்டுகிறது எனக் கருதுகிறோம். கடந்த ஆண்டினைக் காட்டிலும் இந்த ஆண்டு பதிவர்களின் பங்கேற்பு அதிகமாகவே இருந்தது. இந்த ஆண்டு விருதுகள் நிகழ்வில் சில மாற்றங்களை கொண்டு வந்திருந்தோம். அதிகளவில் சுமார் 20 பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. அதோடு மூன்றாவது கட்டத் தேர்வில் நடுவர் குழுவின் தேர்வு இருந்தது. தமிழ்மணம் நிர்வாகம் மற்றும் வலைப்பதிவர்களை உள்ளிட்ட நடுவர் குழு அமைக்கப்பட்டு இடுகைகள் தேர்வு செய்யப்பட்டன. நடுவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, குறித்த தேதிக்குள் தங்களது மதிப்பெண்களை அளித்தனர். அவர்களின் ஆர்வத்திற்கு எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஆண்டு போட்டியின் சிறப்பம்சமாகப் பெண் பதிவர்களுக்கான தனிப்பிரிவு உருவாக்கப்பட்டிருந்தது. மகளிர் மட்டும் என்பது போல முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பங்கேற்று, பெண் நடுவர்களால் இடுகைகள் பரிசீலனை செய்யப்படும் வகையில் இந்தப் போட்டியினை உருவாக்கியிருந்தோம்.
தமிழ்மணத்தில் 2010ம் ஆண்டு மட்டும் சுமார் 1 லட்சத்து நாற்பதாயிரம் இடுகைகள் திரட்டப்பட்டுள்ளன. இதில் இருந்து சுமார் 1511 இடுகைகள் போட்டியில் பங்கேற்றன. இந்த 1511 இடுகைகளில் இருந்து 40 இடுகைகள் சிறந்த இடுகைகளாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பெரிய பணியை செய்வதில் எங்களுக்குத் துணையாக இருந்த பதிவர்கள், வாசகர்கள், நடுவர்கள், விளம்பரதாரர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்மணம் விருதுகள் நிகழ்வு என்பது பதிவர்களை ஊக்குவிக்கும் ஓர் அடையாளம் மட்டுமே. பரிசுத் தொகை என்பதும் ஓர் அடையாளத்தொகை மட்டுமே. என்றாலும் இந்த ஆண்டும் ரூ45,000.00 மதிப்புள்ள பரிசுகளை இந்த நிகழ்வில் அறிவித்து இருந்தோம். வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுக்கூப்பன் மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்படும். பரிசுக் கூப்பனைக் கொண்டு உடனே பரிசுகளைப் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டுகிறோம். நியூபுக்லாண்ட்ஸ் கடைக்கு நேரில் செல்ல முடியாவதர்கள் நியூபுக்லாண்ட்சைத் தொடர்பு கொண்டு அஞ்சல் மூலம் புத்தங்களைப் பெற்றுக் கொள்ளலாம். இது தவிர நூல் உலகம் வழங்கும் புத்தக கூப்பனைக் கொண்டு இணையத்தில் பரிசுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த விருதுகள் நிகழ்வில் எங்களுடன் உறுதுணையாக இருந்து ஒத்துழைத்த நடுவர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுடன் பணியாற்றிய நடுவர்களின் பெயர்கள்.
தருமி, தமிழ்நதி, டாக்டர். ருத்ரன், துளசி கோபால், வினவு, சுரேஷ் கண்ணன், குழலி, கோவி.கண்ணன், டாக்டர். புருனோ, செந்தழல் ரவி, சுசீலா, சந்தனமுல்லை, கவிதா, TV ராதாகிருஷ்ணன், பழமைபேசி, ரவிச்சந்திரன், சீனா, து.குமரேசன் (விருபா), ஜாக்கி சேகர், பிரசன்னா, கேபிள் சங்கர், ஜோதிஜி, கேஆர்பிசெந்தில், சங்கரபாண்டி, தமிழ் சசி, இரமணீதரன், செல்வராசு, காசி ஆறுமுகம், இளங்கோ, விஜய் மணிவேல், கார்த்திக் ராமாஸ், பாலாஜி பாரி, சுந்தரவடிவேல், தாரா, மயிலாடுதுறை சிவா, நா.கணேசன்
தமிழ்மணம் விருதுகள் 2010ம் ஆண்டு வெற்றி பெற்றவர்களின் பட்டியல் இந்தப் பக்கத்தில் உள்ளது.
http://tamilmanam.net/awards2010/winners2010.php
புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி…
தமிழ்மணம் விருதுகள் ஒருங்கிணைப்பு குழு
தமிழ் சசி
சங்கரபாண்டி
இரமணீதரன்
செல்வராசு
விஜய் மணிவேல்
தமிழ்மணம் விருதுகள் 2010 – இரண்டாம் சுற்று முடிவுகள்
தமிழ்மணம் விருதுகள் 2010 நிகழ்வில் இரண்டாம் சுற்றில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல் இந்தச் சுட்டியில் உள்ளது
http://www.tamilmanam.net/awards2010/2nd_round_results.php.
இந்தப் பட்டியலில் உள்ள இடுகைகள் நடுவர் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்படும். நடுவர் குழுவின் பரிசீலனை அடுத்த சில நாட்கள் நடைபெறும். முடிவுகள் பொங்கல் தினத்தன்று வெளியாகும்.
போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்ற பதிவர்களுக்கும், வாக்களிப்பில் பங்கேற்ற பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
தமிழ்மணம் விருது தேர்வுக் குழு
புத்தாண்டு வாழ்த்துக்கள்; புதிய சேவை
தமிழ்மணத்தின் பதிவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் எங்களது இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தப் புத்தாண்டில் தமிழ்மணம் மற்றொரு புதிய சேவையை அறிமுகப்படுத்துகிறது. ஏற்கனவே ”தமிழின் முன்னணி வலைப்பதிவுகள்” என்ற சேவையின் மூலம் ஒவ்வொரு வாரமும் முதல் 20 இடங்களைப் பெற்ற வலைப்பதிவுகளின் பட்டியலை வெளியிட்டு வந்தோம்.
இதன் தொடர்ச்சியாக கடந்த மூன்று மாதங்களில் ஒவ்வொரு பதிவும் பெறும் பார்வைகளை முதன்மையாகக் கொண்டு தமிழ்மணத்தில் இணைந்துள்ள ஒவ்வொரு பதிவையும் தர வரிசை படுத்தும் புதிய சேவையை – தமிழ்மணம் தரவரிசை(Traffic Rank) அறிமுகப்படுத்துகிறோம். இந்தச் சேவை தமிழ்மணத்தில் இணைந்துள்ள அனைத்து பதிவுகளுக்கும் அளிக்கப்படும். தற்பொழுது தமிழ்மணத்தில் இருந்து பெறும் பார்வைகளை அடிப்படையாக கொண்டு இந்த சேவை செயல்பட்டாலும் எதிர்காலத்தில் ஒரு தளம் பெறும் மொத்த பார்வைகளையும் கொண்டு செயல்படும் வகையில் இந்தச் சேவை விரிவு படுத்தப்படும்.
இந்தச் சேவையை எப்படி பயன்படுத்துவது ?
இதற்கென ஒரு பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது http://www.tamilmanam.net/blog_ranking.php. அங்கே சென்று உங்கள் தளத்தின் முகவரியை அளித்தால் அந்தப் பதிவின் தரவரிசை(Traffic Rank) கிடைக்கும்.
உதாரணமாக தமிழ்மணம் அறிவிப்புகள் தளத்தின் தர வரிசை 112
இதனைப் பெற தளத்தின் முகவரியை அளிக்க வேண்டும்

அளி என்ற பொத்தானை அழுத்தியவுடன் தளத்தின் தரவரிசை கிடைக்கும். அத்துடன் உங்கள் தளத்தில் இந்த தரவரிசையை வைத்துக் கொள்வதற்கான நிரலும் இருக்கும். இந்த நிரலை உங்கள் வலைத்தளத்தில் வைத்துக் கொள்வதன் மூலம் தரவரிசை புதுப்பிக்கப்படும் பொழுது உங்கள் தளத்தில் இருந்தே புதிய தரவரிசையை தெரிந்து கொள்ளலாம்
இந்தச் சேவை பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் ஒரு இனிய வலைப்பதிவு அனுபவத்தை அளிக்கும் என நம்புகிறோம்.
*************
2010ம் ஆண்டுக்கான முதல் 100 இடங்களைப் பெற்ற பதிவுகளின் தரவரிசை நாளை, புத்தாண்டு தினத்தன்று வெளியாகும்
புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி…
நிர்வாகம்,
தமிழ்மணம்
தமிழ்மணம் விருதுகள் 2010 முதல் சுற்று முடிவுகள்
தமிழ்மணம் விருதுகள் 2010ம் ஆண்டு நிகழ்வில் பதிவர்கள் மட்டும் பங்கெடுக்கும் முதல் சுற்று வாக்கெடுப்பு நேற்றுடன் நிறைவு பெற்றது. முதல் சுற்றில் அதிக ஓட்டுகளைப் பெறும் 10 இடுகைகள் அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெறும் என அறிவித்து இருந்தோம். ஆனால் பல இடுகைகள் ஒரே அளவிலான வாக்குகளைப் பெற்று இருப்பதால், ஒவ்வொரு பிரிவில் இருந்தும் 10க்கும் மேற்பட்ட இடுகைகள் அடுத்தச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.
போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் இடுகைகளை பரிந்துரை செய்ததுடன் மட்டுமில்லாமல் வாக்கெடுப்பிலும் பங்கேற்ற பதிவர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
அடுத்தச் சுற்று பொது வாக்கெடுப்பு நாளை டிசம்பர் 28 முதல் தொடங்குகிறது. பதிவர்கள், வாசகர்கள் என அனைவரும் இதில் பங்கு பெறலாம். சனவரி 4ம் தேதி வரை வாக்கெடுப்பு நடைபெறும். தமிழ்மணத்தில் பயனர் கணக்கை வைத்துள்ள அனைவரும் இந்த வாக்கெடுப்பில் பங்கு பெற முடியும்.
வாக்குச்சீட்டு
வாக்குச்சீட்டு இந்தச் சுட்டியில் உள்ளது.
http://www.tamilmanam.net/login/tmawards_2010_vote.php
உங்கள் பயனர் பெயரை கொண்டு உள்நுழைந்து இரண்டாம் சுற்றில் வாக்களிக்க முடியும்..
நிர்வாகம்,
தமிழ்மணம்


