த‌மிழ்ம‌ண‌ம் விவாத‌க்க‌ள‌ம்: விரிவான‌ அறிவிப்பு

December 27, 2006 – 3:40 pm by தமிழ்மணம்

மனித வர்க்கத்தின் அத்தனை வளர்ச்சிக்கும் ஆதாரம், சுழற்சி. பூமியின் சுழற்சியில் உள்ளது நம் உயிராதாரம். சுழலும் சக்கரங்கள் மனிதனின் மன வேகத்தை இயந்திரத்தில் ஏற்றி இயக்கிய முயற்சி. மனித வரலாற்றில் அறிவியல், பொருளாதாரம், அரசியல், சமூகம் ஆகியவற்றில் நிகழும் அத்தனை மாற்றங்களும் இச்சுழற்சியின் வேகத்தினைப் பொருத்தே அமைகின்றன.

மனிதகுலத்தின் எண்ணச்சுழற்சி, அது வாழும் சமுதாயத்தை அப்படியே பெயர்த்தெடுத்து அடுத்த கட்டத்திற்கு நகர்த்திவிடும் பேராற்றல் கொண்டது. சிந்தனையில், செயல்களில், விருப்பங்களில், ஏன் வாழும் முறைகளிற்கூட அருகருகே வசிக்கும் இரு மனிதர்களிடையே எண்ணற்ற வேறுபாடுகள். இத்தகைய வேறுபாடுகளை மாற்ற முயலாமல், புரிந்துகொள்ள முயலும் ஒரு சமுகமே உயர்வு நோக்கிப் பயணிக்கும். புரிந்துகொள்ள முயலும் ஒரு சமூகத்தில் எல்லாவித மதிப்பீடுகளும் நம்பிக்கைகளும் விமர்சிக்கப்பட்டு, மறு ஆய்விற்குட்படுத்தப்பட்டு சிதைந்து தேய்ந்து கால ஓட்டத்தில் மீண்டுமொரு புதிய உருவாக்கம் கொள்ளுமே தவிர, தேங்குநீர்க்குட்டையாய் நின்று தீங்கிழைப்பதில்லை. “இதுதான், இதற்குளேதான் எல்லாம், இதுவே கடைசி” என அனைத்தையும் கட்டத்திற்குள் அடக்கும் ஆதிக்க முகம் நோக்கி நகர்வதல்ல வளர்ச்சி.

இத்துணை காலமாக‌ இருந்துவரும் அனைத்து ஆதிக்கத்தையும் விவாதத்திற்குள்ளாக்குவதிலேதான் உள்ளது உண்மையான வளர்ச்சி. எவ்வித அபிமானமும் எதன் மீதுமில்லாமல் சமுதாய நலனை மட்டுமே கருத்திற் கொண்ட விவாதங்கள், திரித்தல்கள், சங்கடங்கள் இல்லா ஒரு பெரும் விவாதமேடையாக வலைப்பதிவுகள் இருக்கவேண்டும். ஆக்கபூர்வமான விவாதங்களை ஊக்குவித்து பயனற்ற வாதங்களை ஒதுக்கி விடுவது சமூகத்தின் ஆற்றல்களைச் சரிவரப் பயன்படுத்துவதற்கு அவசியமானது. அதற்கான ஒரு முன்னோட்ட முயற்சியே தமிழ்மணத்தின் விவாதக்களம்.

முதல் விவாதக்களம் தமிழ்மணம் நிர்வாகிகளால் தேர்ந்தெடுக்கப்பெற்ற நான்கு வலைப்பதிவர்களால் நடத்தப்பெறும். பதிவுலகிற் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாகத் தனது எண்ணங்களை எழுதும் பதிவர் மா.சிவக்குமார் அவர்கள் இவ்விவாதக்களங்களின் பொறுப்பாளராகச் செயற்படுவார் .

* இப்பதிவர்கள் முக்கியமெனக் கருதும் கருத்துக்கள், நம்பிக்கைகள், படைப்பிலக்கியங்கள், சமூகமதிப்பீடுகள், செய்திகள் ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்டு ஒருவர் தமிழ்மணம் விவாதக்க‌ளத்தில் பதிவிடுவார்.

* பதிவு வெளியிடப்பட்ட பின்னர் ஐந்து பதிவர்களும், பதிவின் மீதான விவாதங்களைத் தொடர்ந்து கொண்டு செல்வர் .

* இந்த ஐந்து பதிவர்கள் மட்டுமல்லாது மற்ற நண்பர்களும் தங்களின் செறிவான, ஆரோக்கியமான வாதங்களை இங்கு வைக்கலாம். விவாதக்கள உறுப்பினர்கள், நெறியற்ற வார்த்தைகள் இருப்பின், அவற்றைத் தவிர்த்து வெளியிடுவர். ப‌திவ‌ர்க‌ளின் க‌ருத்துக்க‌ள் எவ்வ‌கையிலும் மாற்ற‌ப்ப‌டா.

* ஒவ்வொரு மாதமும் நான்கு பதிவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்கள் அடுத்த‌ மாதத்திற்கான நான்கு பதிவர்களைத் தேர்ந்தெடுப்பர்.

கருத்துக்கள் மட்டுமே மோதும் வெளியாகத் தமிழ்மணம் விவாதக்களம் இருக்கும்.

வரும் சனவரி,1 புத்தாண்டு தினத்திலிருந்து தமிழ்மணம் விவாதக்களம் திறக்கப்படவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

புரிந்துணர்வுடனான தொடர்ந்த ஒத்துழைப்பிற்கு நன்றி.

நிர்வாகம்
தமிழ்மணம்

  1. 23 Responses to “த‌மிழ்ம‌ண‌ம் விவாத‌க்க‌ள‌ம்: விரிவான‌ அறிவிப்பு”

  2. நல்ல முயற்சி. வெற்றி பெறவும் இதன் மூலம் பலரும் பயன் பெறவும் வாழ்த்துகள்.

    By குமரன் (Kumaran) on Dec 27, 2006

  3. ரொம்ப நல்ல முயற்சி. முன்னால் பட்டிமன்றம் என நான் துவங்க முயற்சித்தேன் குறைந்தபட்ச வரவேற்பே இருந்தது.

    நிஜமா நம்ம வலைப்பதிவர்களுக்கு தற்போது தருவதைவிட வலுவான வாதங்களை (அடுத்தவரை திட்டாமல்) எல்லாரும் படிக்கும் வகையில் தரமுடியும் என்னும் நம்பிக்கை எனக்கிருக்கிறது.

    தமிழ்மணம் இன்னொரு படி மேலே போயிருக்கிறது என்பதில் மிக்க மகிழ்ச்சி.

    By சிறில் அலெக்ஸ் on Dec 27, 2006

  4. தங்கள் பயனுள்ள இந்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்.

    வைசா

    By வைசா on Dec 27, 2006

  5. ஆழமான ,ஆரோக்கியமான விவாதங்கள் உருவாகி கருத்து மாற்றம் வரட்டும்.
    யோகன் பாரிஸ்

    By johan paris on Dec 27, 2006

  6. நல்ல முயற்சி.

    அடுத்தவரைத் திட்டாமல் எழுத முடியும் .

    எதிர் பார்ப்புகளுடன் –கூத்தாடி

    By koothaadi on Dec 27, 2006

  7. நல்ல முயற்சி. கருத்துகளை மட்டும் முன்னிறுத்தி தனிமனித தாக்குதல்களில்லாது, துவேஷங்களில்லாது விவாதங்கள் அமைவதற்கு வாழ்த்துகிறேன்.

    சிந்தனை ரீதியாக லேசான மாற்றத்தினைக்கூட நம்மிடையே இவ்விவாதங்களின் கருத்துகள் ஏற்படுத்தினாலே வெற்றிதான்.

    இம்முயற்சிக்குப் பாராட்டுகள்.

    By Sundar on Dec 27, 2006

  8. நல்ல முயற்சி. ஆரோக்யமான விவாதங்களை எதிர் நோக்கி.. ஆவலுடன்..

    By கால்கரி சிவா on Dec 27, 2006

  9. நல்லதிட்டம் தான் இது வளர எனது வாழ்த்துகளையும் வரவேற்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்

    By ennar on Dec 27, 2006

  10. மிக நல்ல முயற்சி.. தற்போது அவசியம் தேவையான முயற்சியும் கூட…

    வாழ்த்துக்கள்

    By பொன்ஸ் on Dec 27, 2006

  11. விவாதக்களம் என்ற ஆரம்பம் மகிழ்ச்சியூட்டுகிறது. நல்லபடி நடைமுறைக்கு வர பிரார்த்திக்கிறேன்.

    இந்த குறிப்பிட்ட நால்வரைத் தவிர வரும் கருத்துகள் மட்டுறுத்தப்பட்டு வெளியிடப்படும் என்பதும் ஒரு தேவையான நீட்சியே. இந்த விவாதங்கள் ஒரு மாதத்துடன் முடிந்துவிடுமா அல்லது எப்போதும் உயிர்ப்புடன் இருக்குமா?

    By சுரேஷ் பினாத்தல் on Dec 27, 2006

  12. நல்ல முயற்சி. ஆனாலும் redundant என்பது என் எண்ணம்.
    எதற்கு சொல்கிறேன் என்றால் எல்ல விதமான விவாதங்கள் எழுப்பும் அனைத்து கேள்விகளுக்கும் எங்கள் கட்சியின் தலைவர் அசுரன் அய்யா,ஏற்கெனவே செம்மையாக பதில் சொல்லியிருப்பதால் புதிதாக கேள்விகளும்/பதில்களும் தேவையற்றது.

    பாலா

    By பாலா on Dec 27, 2006

  13. இன்றைய தினத்தில் தேவை “மனித நேயம்” அதற்க்கான நல்ல முயற்ச்சியை தொடங்குவோம் இன்றே.

    By podakkudian on Dec 28, 2006

  14. ரொம்ப நாளாக எதிர்பார்த்த விஷயம். நன்றி!

    By லக்கிலுக் on Dec 28, 2006

  15. வாழ்த்துக்கள்.

    By pot"tea"kadai on Dec 28, 2006

  16. தேவையான முயற்சி!
    இனிது அரங்கேற வாழ்த்துக்கள்!

    By SP.VR.SUBBIAH on Dec 28, 2006

  17. நல்ல முயற்சி. வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    By Manian on Dec 28, 2006

  18. வாழ்த்துக்கள்

    By வினையூக்கி on Dec 28, 2006

  19. i can’t understand your motive to start this ground

    -aasath

    By aasath (or) bagath on Dec 28, 2006

  20. அடுத்த படி…
    மேலும் பல படிகள் ஏற வாழ்த்துக்கள்.

    By dharumi on Dec 28, 2006

  21. இம்முயற்சிக்குப் பாராட்டுகள்.

    By rajan on Dec 29, 2006

  22. already one fool(bala) vomitted here.anyway all the best

    By kappi on Dec 29, 2006

  23. மிக நல்ல முயற்சி. ஏற்கனவே குழுமங்களிலும், பதிவுகளின் பின்னூட்டங்களிலும் விவாதங்கள் நடைப்பெற்று வருகிறதென்றாலும், இது போன்ற ஒரு களம் கண்டிப்பாக அவசியமான ஒன்று.

    நாம் தான் ஜெயிக்கவேண்டும் என்ற ஈகோ இல்லாத விவாதத்தில் வைக்கப்படும் கருத்தை மட்டுமே மனதில் கொண்டு, அநாகரீக வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்த்து ஆரோக்கியமான, ஆழ்ந்த, தெளிவான, அனைவரும் பயனடையும் வகையில் விவாதங்கள் அமைய நாம் எல்லோரும் ஒன்றுப்படுவோம்.

    வாழ்த்துக்கள்.

    By மஞ்சூர் ராசா on Dec 29, 2006

  24. பேசாமல் ஒரு தமிழ்மணம் ஜிகுரூப் தொடங்கி இருக்கலாம்! மற்ற படி பெரியஎதிர்பார்ப்பு ஒன்றும் எனக்கு இல்லை!

    By இணைய நாடோடி on Dec 29, 2006

Post a Comment