ஒவ்வாத பதிவுகளை நீக்குதல் (தொடர்ச்சி)

August 23, 2006 – 8:53 pm by தமிழ்மணம்

தமிழ்மணத்துக்கு ஒவ்வாத பதிவுகளை நீக்குவதற்கான வழிமுறை வரையப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படும்வரை, இடைக்காலத்திட்டமாகத் தற்காலிக வழிமுறை நடைமுறையிலிருக்கும்.

தமிழ்மணம் அறிவிப்பு பதிவிலே ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்ததுபோல, தமிழ்மணம் பதிவுகளின் உள்ளடக்கமும் அனுமதிக்கப்படும் பின்னூட்டங்களும் எவ்வாறு இருக்கவேண்டுமெனத் தீர்மானிக்கும் உரிமை எவ்விதத்திலும் அற்றது. ஆனால், தன்னோடு இணைக்கப்படும் பதிவுகள் தமிழ்மணத்தின் விதிகளுக்கு ஒவ்வாதன என்று உணரப்படும் நிலையிலே அவற்றினைத் தன் தொடுப்பிலிருந்து விலக்கிக்கொள்ள முழு உரிமையும் தமிழ்மணத்துக்கு உண்டு.

ஏற்கனவே சுட்டிக்காட்டியதுபோல, எக்காலகட்டத்திலும் தமிழ்மணத்தின் முடிவே இறுதியானதென்றபோதுங்கூட, வெளிப்படையாக ஒரு பதிவினை நீக்க வேண்டுமெனவும் ஏன் நீக்கக்கூடாதெனவும் கருத்துகளையும் தன்னிலை விளக்கத்தினையும் முன்வைக்கும் வழிமுறைகளைத் தமிழ்மணம் வடிவமைக்கின்றது. அது நடைமுறைக்கு வரும்வரையிலான இடைக்காலகட்டத்திலே, தமிழ்மணம் தன் தொடுப்புக்கு ஒவ்வாது என்று எண்ணும் பதிவு அலகுகளைப் பதிவருக்கு அவர் விரும்பினால், அகற்ற ஒரு நாள் அவகாசம் கொடுக்கும். பதிவலகுகளை விலக்க முன்னர் அப்பதிவலகுகள் ஏன் விலக்கப்படுகின்றன என்பதற்கான விளக்கத்தினைச் சுருக்கமாகத் தமிழ்மணம் கட்டாயம் தரும். தன் பதிவலகுகளின் உள்ளடக்கம், சொற்பயன்பாடு, அமைப்பு, ஒலிப்பு ஆகியவற்றிலே பதிவரின் விளக்கம் நிச்சயமாக வரவேற்கப்படும். விளக்கம் தமிழ்மணத்திற்குத் திருப்தி தராத நிலையிலே அவர் அவ்வாறு அகற்றாத பட்சத்திலே, தமிழ்மணம் அனைத்துப்பதிவர்களுக்கும் பயனர்கையேட்டிலே அளித்த விதிமுறைகளின்படி அக்குறிப்பிட்ட பதிவலகுகளைத் தன் திரட்டித்தொடுப்பிலிருந்து விலக்கும். எந்நிலையிலும் தமிழ்மணத்தின் முடிவே இறுதியானதாகும்.

உங்கள் புரிதலுக்கும் தொடர்ந்து காட்டும் ஒத்துழைப்புக்கும் நன்றி.

விலக்க வேண்டிக்கொள்ளும் பதிவலகின் பதிவருக்குக் கீழே தரப்பட்ட விபரங்கள் அறிவிக்கப்படும்.

தமிழ்மணம் உங்களின் கீழ்க்கண்டபதிவினை ஒரு நாளுக்குள் விலத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறது

பதிவு:
இடப்பட்ட நாள்:
விலக்கலுக்கு முன்வைக்கப்படும் காரணம்:
பதிவரே விலக்குவதற்கான இறுதிநாள்:

இச்செயற்றிட்டத்தின்படி இதுவரை இரண்டு பதிவலகுகளை விலத்திக்கொள்ளுமாறு தமிழ்மணம் கேட்டிருக்கின்றது. இவ்விருபதிவுகளும் சகபதிவர்களினால் அப்பதிவுகள் தமிழ்மணத்திலே இணைக்கப்படத் தகுதியற்றவை என முறையீடு செய்யப்பட்ட பதிவுகளிலிருந்து தமிழ்மணம் தன் தொடுப்புக்குத் தகுதியற்றவை என்று வகை பிரித்தவையாகும்.

தமிழ்மணம்

  1. 29 Responses to “ஒவ்வாத பதிவுகளை நீக்குதல் (தொடர்ச்சி)”

  2. அந்த பதிவுகளின் சுட்டியைத் தந்தால் மற்றவர்கள் எந்தமாதிரி பதிவுகளை தமிழ்மணம் திரட்ட விரும்பவில்லை எனப் புரிய உதவும் என நினைக்கிறேன்.

    By சிறில் Alex on Aug 23, 2006

  3. வேணாம் சிறில். வலைஞர்களுக்குத் தெரியும் எந்தமாதிரி எழுதக்கூடாதுன்னு.

    சுட்டி வேற கிடைச்சா, அந்தப் பதிவர்களுக்கு மனசுக்கு நல்லா இருக்குமா? விடுங்க.

    By துளசி கோபால் on Aug 24, 2006

  4. நீங்க சொல்றதும் நியாயம்தான்.. ஆனா கவலைப் படுறவங்களாயிருந்தா அப்படி எழுதியிருக்கமாட்டாங்க.. இன்னொண்ணு ரெண்டுபேர் சொன்னதன் பேரில் மட்டுமே பதிவுகள் நீக்கப்பட்டால் அதுவும் கடினமானது. தமிழ்மண நிர்வாகிகள் இதை செய்யமாட்டார்கள் என நம்புகிறோம் அதேவேளையில். குறைந்த பட்சம் எதற்காக நீக்கப் படுகிறது என்னும் காரணத்தை மேலோட்டமாகவாவது தெரிவிக்கலாம்.

    ஆபாச வார்த்தைகள், தனி நபர் தாக்குதல், இது மாதிரி சொல்லலாமே.

    பதிவரையே பதொவை நீக்கச்சொல்லி கேட்பது மிகவும் பாராட்டத்தக்க முயற்சி. வாழ்த்துக்கள்.

    By சிறில் Alex on Aug 24, 2006

  5. விலக்கப்படக்கூடியவை எந்த மாதிரியான பதிவுகள் என்பது மிகத்தெளிவாக முன்னைய பதிவிலே குறிப்பிடப்பட்டிருக்கின்றது. “Bloggers whose contents are shown here as previews are requested not to post content that is slanderous, illegal, incisive of dangerous acts, stories inciting terror and violence, or in violation of copyright law.”

    தமிழ்மணநிர்வாகம் ஒவ்வொரு தனிப்பதிவினையும் வாசித்துக்கொண்டிருக்கும் நேர வசதியினைக் கொண்டிருக்கவில்லை. அதனால், சகபதிவர்கள் விலக்கப்படவேண்டியவை எனச் சுட்டிக்காட்டும் பதிவுகளை மட்டுமே விலக்கப்படவேண்டியதன் அவசியம் குறித்து பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. சுட்டிக்காட்டப்படும் அனைத்துப் பதிவுகளும் நீக்கப்படுவதில்லை. தமிழ்மணத்தின் விதிகளை மீறியிருக்கின்றன என்று கண்டறியப்பட்ட பதிவுகள்மட்டுமே விலக்கப்படுகின்றன.

    தனிப்பட்ட அஞ்சலிலே பதிவர்களுக்குத் தெரியப்படுத்தும்போது, இந்தப்பதிவிலே குறிப்பிட்டதுபோல, தெளிவான காரணம் சுட்டப்படுகின்றது.

    குறிப்பிட்ட பதிவர்களுக்குச் சடங்கடத்தினை ஏற்படுத்துமென்பதால் விலக்கப்பட்ட பதிவுகளின் சுட்டிகளைத் தருவதற்கு இன்னமும் தமிழ்மணத்துக்குத் தயக்கமிருக்கின்றது. ஆனால், பதிவினை விலக்கும்படி கேட்டு அனுப்பிய அஞ்சல் ஒரு பதிவரின் சரியான முகவரியின்மையினாலே திரும்பியிருக்கின்றது. அதனால், அவருக்கு இப்பதிவின்பின்னூட்டத்தின் ஊடாகத் தருவதற்குத் தமிழ்மணம் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றது.

    பதிவு: பார்ப்பனர்கள் எதிலிருந்து பிறந்தார்கள்?
    இடப்பட்ட காலம்: புதன், ஆகஸ்ட் 23, 2006
    விலக்கலுக்கு முன்வைக்கப்படும் காரணம்: தனிப்பட்ட தாக்குதல் உள்ளடக்கிய பதிவும் அவதூறு உள்ளடக்கிய பின்னூட்டங்களும்
    பதிவரே விலக்கிக்கொவதற்கான இறுதிநாள்: வெள்ளி, ஆகஸ்ட் 25, 2006 00:00 GMT

    By தமிழ்மணம் on Aug 24, 2006

  6. மிகச்சரியான முடிவு.

    ஆனால் ஒன்று. ஒரு பதிவு வெளியிடப்பட்டு, நண்பர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து, அதற்குப்பின் ஒரு நாள் அவகாசம் கொடுத்து அந்தப் பதிவை நீக்க வேண்டும் என்று சொல்வது எந்த அளவில் பலனளிக்கப் போகிறது..? எல்லோரும் படித்த பின்னர் அந்தப்பதிவு நீக்கப்பட்டால்தான் என்ன..? அல்லது நீக்கப்படாவிட்டால்தான் என்ன…?

    சற்று யோசிப்பீர்களா…? நன்றி.

    By Muruga on Aug 24, 2006

  7. மோசமான வார்த்தைப் பிரயோகங்கள் கொண்ட பின்னூட்டங்கள் (மட்டும்) உள்ள பதிவுகளுக்கு மட்டுமானால் உங்களுடைய இந்த ஒருநாள் அவகாசம் தரலாம். ஆனால், [தனிமனிதத்தாக்குதல் தணிக்கை செய்யப்பட்டுள்ளது - தமிழ்மணம்] பதிவுகளை (உ.ம். மேலே குறிப்பிட்டுள்ள ஒரு பதிவு), எந்த அவகாசமும் கொடுக்காமல் உடனடியாக நீக்க வேண்டும். விஷ விதைகளை விதைப்பவர்களையும் வெட்டி சாய்க்க வேண்டும். ஏற்கனவே தமிழ்மணத்தில் காறித்துப்பப்பட்டு ஓடியவர்கள், வேறு பெயர் வைத்துக் கொண்டு மீண்டும் நுழைந்தால் இப்படி தான் ஆகும். தமிழ்மணத்தில் தடை செய்யப்படுபவர்களை ip-ban செய்ய யோசிக்கலாமே?!

    By மாயவரத்தான்... on Aug 24, 2006

  8. பதிவர் முருகா

    தமிழ்மணம் நடைமுறைக்குச் சாத்தியமானதும் இயன்றளவு எல்லோருக்கும் நியாயமானதும் தனது விதிமுறைகளுக்கு ஒத்துப்போகக்கூடியதுமான தீர்வுகளையே நடைமுறைப்படுத்த எண்ணுகின்றது.

    விலக்கப்பட வேண்டிய பதிவு என்று சுட்டிக்காட்டும் பதிவினைத் தந்தவருக்கும் அவருக்குரிய காரணங்களைச் சொல்ல வழி கொடுப்பதுதான் நியாயமான தீர்வாகப் படுகின்றது. அதனாலேயே அவருக்குத் தனிப்பட விலக்குதல் குறித்துச் சொல்லி வேண்டுகோளும் விடப்படுகின்றது. அதன்மூலம் வேண்டாத விளம்பரம் தவிர்க்கப்படலாம்.

    இருக்கும் மாற்றுவழிகளிலே சிறப்பானதை மட்டுமே தமிழ்மணத்தினால் நடைமுறைப்படுத்தமுடியும். நீங்கள் சுட்டும் நிலையைத் தவிர்க்கக்கூடிய தமிழ்மணம் தற்போது கைக்கொள்ளும் கொள்ளவிருக்கும் வழிமுறைகளைவிடச் சிறப்பான மாற்று வழியேதுமிருந்தால் தாருங்கள். அதனைச் சாத்தியப்படுத்துதல் பற்றிப் பரிசீலனை செய்யலாம்.

    By தமிழ்மணம் on Aug 24, 2006

  9. பதிவர் மாயவரத்தான்

    பதிவுகள் பதியப்படும் வகையிலே ஆபாசம், தனிமனிதத்தாக்குதல் என்பனவற்றினை எல்லாப்பதிவுகளிலும் ஒரே அளவுகோலினாலே அளந்துகொள்ளும் சாத்தியமிருப்பதாகத் தோன்றவில்லை. அதனால், தமிழ்மணத்தின் விதிகளை மீறுவதாகத் தோன்றும் பதிவுகளை ஒவ்வொன்றாகத் தனித்தனியாகவே அணுகி விலக்க முடியும். ஆனால், நடைமுறைக்குச் சாத்தியமாகும்நிலையிலே இயலுமானவரை விதிகளை எல்லாப்பதிவுகளுக்கும் ஒன்றாகவே வைத்துக்கொள்ள முயல்கிறோம். இத்தகைய அணுகுமுறையிலே விலக்க வரையறுக்கும் தவணையினை எல்லாப்பதிவுகளுக்கும் பரிசீலனை செய்யப்பட்ட காலத்திலிருந்து ஒரே அளவாகத் தர முயற்சிக்கின்றோம்.

    உங்களின் பின்னைய கருத்து குறிப்பிட்ட பதிவர் மீதான தனிப்பட்ட விமர்சனமாகவும் இருப்பதாகத் தோன்றுவதால், தமிழ்மணம் இந்த அறிவிப்பு பதிவிலே அது குறித்து கருத்து கூறமுடியாது.

    By தமிழ்மணம் on Aug 24, 2006

  10. //பதிவு: பார்ப்பனர்கள் எதிலிருந்து பிறந்தார்கள்?
    இடப்பட்ட காலம்: புதன், ஆகஸ்ட் 23, 2006
    விலக்கலுக்கு முன்வைக்கப்படும் காரணம்: தனிப்பட்ட தாக்குதல் உள்ளடக்கிய பதிவும் அவதூறு உள்ளடக்கிய பின்னூட்டங்களும்
    பதிவரே விலக்கிக்கொவதற்கான இறுதிநாள்: வெள்ளி, ஆகஸ்ட் 25, 2006 00:00 GMT //

    உங்களுடைய மிரட்டலுக்கெல்லாம் அடிபணிய விரும்பாவிட்டாலும் எனக்கு தனிமடலில் ஆலோசனைகள் சொன்ன “அந்த” இருபது பேரின் அன்பை ஏற்று அந்த பதிவை நான் அகற்ற உடன்படுகிறேன். பார்ப்பனர் எதில் இருந்து பிறந்தார்கள் என்று நான் கேள்வி கேட்டாலும் அவர்கள் தாங்கள் பிரம்மனின் முகத்தில் இருந்து பிறந்தேன் என்று சொன்னதாலேயே நாங்கள் பகுத்தறிவுக் கேள்விகள் கேட்டோம் என்பதை நியாபகப்படுத்த விரும்புகிறோம்.

    காலம்காலமாய் தமிழர்களை அடக்கி வைத்திருந்து தீண்டாமை எனும் கொடுமையால் எங்களை எல்லாம் சித்திரவ்தை செய்து வர்ணபேதம் என்று சொல்லி மக்களிடையே ஜாதிப்பேயினை புகுத்திய அந்த இழிபிறப்புகளை எதில் இருந்து வந்தீர்கள் என்று கேள்வி கேட்பது என்னைப் பொருத்தமட்டில் தவறாகாது என்பதில் நான் இன்னும் உறுதியாக இருக்கிறேன்.

    அன்புடன்,
    கருப்பு(எ))சதீஷ்குமார்.

    By விடாதுகருப்பு on Aug 24, 2006

  11. என்னுடைய பழைய மின்முகவரி செயல் இழந்து போய்விட்டது. புதிய முகவரியான karuppupaiyan at gmail dot com என்னுடைய தளத்தின் முன்பக்கத்திலேயே உள்ளது என்பதை வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

    By விடாதுகருப்பு on Aug 24, 2006

  12. பதிவர் கருப்பு(எ))சதீஷ்குமார்

    உங்கள் கருத்துகள் குறித்து தமிழ்மணம் விமர்சிக்க உரிமையற்றது. உங்களுக்கிருக்கும் கருத்தமைப்பினதும் நம்பிக்கையினதும் சுதந்திரத்திலே தமிழ்மணம் எதுவிதமான விமர்சனத்தினையும் வைக்கவில்லை என இங்கே மீண்டும் தெளிவுபடுத்துகிறது. ஆனால், தான் தொடுக்கும் பதிவுகளிலும் அவற்றிலே அனுமதிக்கப்பட்ட பின்னூட்டங்களிலும் நேரடியான தனிமனிதத்தாக்குதல்கள் தொனியிலும் சொற்களிலும் காணப்படாதவாறு இருப்பதைத் தமிழ்மணம் விரும்புகின்றது. அவ்வாறு இல்லாத நிலையிலே பதிவரிடம் வேண்டுகோள் விடுக்கின்றது. அது நிகழாதவிடத்து, அக்குறித்த பதிவலகினைத் தனது தொடுப்பிலிருந்து விலக்கிக்கொள்கிறது.

    தாங்கள் இவ்வேண்டுகோளை மிரட்டுவதாகப் புரிந்து கொண்டதையிட்டு தமிழ்மணம் வருத்தம் கொள்கின்றது. எச்சந்தர்ப்பத்திலுமே தமிழ்மணம் எவருக்கும் எத்தேவை கருதியும் மிரட்டவேண்டிய அவசியமோ உரிமையோ கொண்டிருக்கவில்லை. அப்படியாக நடக்கவும் மாட்டாது என்று உறுதிப்படுத்துகின்றது. புரிந்துகொள்வீர்களென தமிழ்மணம் நம்புகிறது.

    உங்கள் குறிப்பிட்ட பதிவலகினை விலக்கிக்கொள்ள முன்வந்தமைக்கு நன்றி.

    By தமிழ்மணம் on Aug 24, 2006

  13. தலைப்புக்குச் சம்பந்தமற்று வந்த சில பின்னூட்டங்களும் மீண்டும் மீண்டும் நான்கு தடவைகள் வந்த ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட ஒரே பின்னூட்ட உள்ளடக்கமும் இங்கே அனுமதிக்கப்படவில்லை. மாயவரத்தானுக்கு விடாது கறுப்பு அளித்த பதிலும் மாயவரத்தானுக்குச் சுட்டிக்காட்டிய அதே போக்கிலே ஒவ்வாத பதிவுகளை நீக்குதல் என்பதற்குச் சம்பந்தமின்றி விலகிச் சென்றிருப்பதால், அனுமதிக்க முடியாததற்கு தமிழ்மணம் அறிவிப்புகள் வருத்தம் தெரிவிக்கிறது.

    விடாது கறுப்பு தங்கள் புதிய அஞ்சல் முகவரியை அறியத் தந்ததற்கு நன்றி. தமிழ்மணத்திலே பதிவு செய்துகொண்ட பதிவர்கள் தங்கள் பதிவு அஞ்சல் முகவரியை மாற்றும்போது தமிழ்மணம் நிர்வாகிக்கும் அறியத் தந்தீர்களானால், தொடர்புகளுக்கு இலகுவாக இருக்கும். நன்றி.

    By தமிழ்மணம் on Aug 24, 2006

  14. ஆபாசமாக எழுதிய மாயவரத்தான் ரமேஷ்குமார் என்கிற [தணிக்கை செய்யப்பட்டது - தமிழ்மணம்] பின்னூட்டம் மட்டும் இங்கே இருக்கலாமா என்பதை அறிய விரும்புகிறேன்!

    By விடாதுகருப்பு on Aug 24, 2006

  15. இக்குறிப்பிட்ட “ஒவ்வாத பதிவுகளை நீக்குதல் (தொடர்ச்சி)” பதிவலகிலே தமிழ்மணத்துக்கு விளக்கமளித்தலுக்கு மேற்கொண்டு ஏதும் இல்லை.

    By தமிழ்மணம் on Aug 24, 2006

  16. நண்பர் விடாது கருப்பின் பதிவும் அதற்கான அவரது விளக்கமும் ஏற்கத்தக்கதே…இதில் தனிமனித தாக்குதல் எங்கிருந்து வருகிறது என்பது எனக்கு புரியவில்லை.

    காலம்காலமாய் உச்சாணிக்கொம்பில் ஆடிக்கொண்டிருக்கும் ஒரு குறிப்பிட்ட குழுவிற்கு எதிரான குமுறலின் ஒலியாகத்தான் இதைப் பார்க்க வேண்டும் என்பது என் எண்ணம்.

    அதே நேரத்தில் தமிழ்மண நிர்வாகிகளின் தன்மையான அனுகுமுறை நேர்மையானதாகவும்,விரும்பத்தக்கதாயும் இருப்பது தமிழ்மண வளர்ச்சிக்கு உரமாய் அமையும்.

    By சதயம் on Aug 24, 2006

  17. பதிவர்கள் விடாது கறுப்பு, சதயம்

    தனிமனிததாக்குதல் என்று தமிழ்மணம் வகைப்படுத்தியிருப்பதற்குள் தனிக்குழுவின் மீதான தாக்குதல் என்பதையும் உள்ளடக்கித்தான் பார்க்கின்றது. இதைத் தெளிவுபடுத்திச் சொல்லாதிருந்தால் இங்கே சுட்டிக்காட்டப்படுகிறது. இனம், மொழி, சாதி, பால் உட்பட்ட விடயங்களிலே ஒரு பதிவின் கருத்துநிலைப்பாடுகள் அல்ல, ஆனால் அக்கருத்துகள் தரப்படும் ஒலிப்பு கருத்துவகைப்பட்ட தாக்குதலுக்கு மேலான சொல்நிலை அவதூறாக இருக்கும்போது மட்டுமே பதிவு நீக்கப்படக் கேட்கப்படுகின்றது.

    ஏற்கனவே சில தடவைகள் சுட்டிக் காட்டியதுபோல விடாதுகறுப்புவின் குறிப்பிட்ட பதிவலகுக்கருத்துகளிலே தமிழ்மணத்துக்கு எதுவிதமான கருத்தினை வெளிப்படுத்தவும் உரிமையில்லை. ஆனால், அவர் கருத்துகளை வெளிப்படுத்தி ஒலிப்பு பெண்கள், சாதி மீதான தமிழ்மணத்தின் விதிகளை மீறிய தனிக்குழுமத்தாக்குதலாகத் தோன்றியதாலேயே விலக்கமுடியுமா எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

    இவ்வேளையிலே பதிவர்களின் புரிதலுக்கான விபரமாகவும் தமிழ்மணம் எந்தளவு தன்னால் இயன்றவரை நிதானத்துடனும் நியாயத்துடனும் நடக்க முயல்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டவும் ஓர் உதாரணத்தினைச் சுட்டிச் சொல்ல முடியும். பதிவர் விடாது கறுப்புவின் இன்னொரு பதிவான டெலிமார்க்கெட்டிங் விபச்சாரமா? பதிவினை அகற்றும்படி தமிழ்மணத்திடம் சகபதிவர்கள் முறையிட்டபோதிலும், தமிழ்மணம் தன் விதிகளுக்கேற்ப அப்பதிவு நீக்கப்பட வேண்டியதல்ல என்றே முடிவெடுத்திருப்பதால், நீக்கப்படவில்லை.

    பொதுவாக தமிழ்மணம் சார்பான மட்டுறுத்தல் அல்லது விலக்கல் என்பது இரண்டு காரணங்களை ஒட்டியே நிகழவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    1. தமிழ்மணத்தின் அடிப்படை நோக்குகளுக்கும் அது அமைத்துக்கொண்ட விதிகளுக்கும் நலமான வளர்ச்சிக்கும் எதிரான விளைவுகளைத் தரக்கூடியவை என்று கருதுகின்ற பதிவுகள்.

    2. தமிழ்மணத்தின் தாய் நிறுவனம் (TMI LLC)பதிவு செய்யப்பட்டுள்ள நாட்டின் சட்டங்களுக்கு எதிராக அல்லது அச்சட்டங்களைப் பயன்படுத்தி, தமிழ்மணம் திரட்டிக்கொள்ளும் தனியாள் பதிவுகளுக்காக தமிழ்மணத்தின் மீது எவரேனும் வழக்கு தொடரப்பட வாய்ப்பளிக்கும் பதிவுகள்.

    இவற்றுக்கு அப்பால் ஒவ்வொரு பதிவரினதும் சொந்த அறநெறித் தரத்திற்கு, அரசியலுக்கு, நம்பிக்கைகளுக்கு ஒத்துவராத ஒவ்வொரு பதிவினையும் நீக்குவது பற்றி தமிழ்மணம் யோசிக்க ஆரம்பிப்பது அவசியமற்றதும் தமிழ்மணத்தின் இலக்குகளைச் சேதப்படுத்தி தற்கொலை செய்துகொள்வதற்குச் சமமானதுமாகும். இதற்காகவே, இயன்றவரை பொதுவான முடிவினை அடையும் விதத்திலே கருத்துக்கூற விரும்பும் எல்லாப்பதிவர்களினதும் கருத்துகளையும் வெளிப்படையாகச் சொல்லும் கருத்தம்பலம் ஒன்றினை இயன்றவரை விரைவிலே அமைக்கத் தமிழ்மணம் விரும்புகின்றது.

    By தமிழ்மணம் on Aug 24, 2006

  18. தங்களின் நடுநிலையான விளக்கத்திற்கு நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன்.

    By விடாதுகருப்பு on Aug 25, 2006

  19. அன்புள்ள தமிழ்மண நிர்வாகிக்கு,

    நல்ல ஓர் ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றத்தினை காட்சி வைக்கும் உங்களின் சிறந்த அணுகுமுறைக்கு முதற்கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சகோ. விடாது கருப்பு அவர்களின் “பார்ப்பனர்கள் எதிலிருந்து பிறந்தார்கள்” என்ற பதிவை நீக்குவதற்கான தாங்கள் அளித்த விளக்கம் போதுமானதாக இல்லையோ என்ற எண்ணம் தொக்கி நிற்கிறது.

    இந்நாட்டின் மைந்தர்களை பிழைப்புக்காக இடம் தேடி வந்த ஓர் கூட்டம் அடக்கி ஒடுக்கி வைப்பதற்கு அடிப்படை மூலக்காரணமாக அவாள்களால் முன்வைக்கப்படும் ஒரு காரணம் தான் “பிராமணர்கள் சிவனின் முகத்திலிருந்து/தலையிலிருந்து பிறந்தார்கள்” என்பது.

    லாஜிக்கிற்கே இடறலான இக்கருத்தை முன்வைத்து காலம்காலமாக அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்நாட்டின் மைந்தர்களுக்காக அவர்களின் மீது வலிந்து திணிக்கப்பட்ட சாபத்தை போக்குவதற்காக அவர்கள் சார்பாக ஒருவர் “பார்ப்பனர்கள் எதிலிருந்து பிறந்தார்கள்” என ஒரு கேள்வியை வைப்பதும் அதன் லாஜிக் இடறலை கேள்விக்குள்ளாக்குவதும் எவ்வகையில் தவறான தனி மனித/குழு தாக்குதலாகும் என்பதை தாங்கள் அறியத்தர வேண்டும்.

    ஆபாசமாக “எழுதுவது” என்பது ஆபாசமான “கருத்துக்களை/ஆலோசனைகளை” கூறுவதன் காரணமாக நிகழ்வது. அதற்காக ஆபாசமாக எழுதுவதை எவ்வகையிலும் நியாயப்படுத்தவில்லை.

    ஆபாசமாக எழுதப்படும் பதிவுகள்/பின்னூட்டங்கள் நீக்கப்படவேண்டியவையே என்பதில் மாற்றுகருத்துக்கு இடமில்லை.

    ஆனால் ஆபாசமாக “கருத்துக்கள்/ஆலோசனைகள்” கூறும் பதிவுகளைக் குறித்து தாங்கள் எதுவும் கூறாதது தங்களின் நோக்கத்தில் சந்தேகத்தை உருவாக்குகிறது.

    இப்பதிவில் சுட்டிக்காட்டப்படும் பதிவரின் ஆபாசமான கருத்துக்கள்/ஆலோசனைகள் கூறும் பதிவுகளைக் குறித்து தங்களின் எண்ணவோட்டம் என்ன என்பதையும் நான் அறிய விரும்புகிறேன்.

    ஆபாச எழுத்து, தனி மனித/குழு தாக்குதல் என்பதற்கு தங்களின் வரைவிலக்கணம் என்ன என்பதில் தற்போதும் குழப்பமான மனநிலையிலேயே நான் உள்ளதால் தான் இப்பின்னூட்டத்தை இங்கு இடுகிறேன்.

    தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என நம்பிக்கையோடு உங்களிடமிருந்து தெளிவான பதிலை எதிர்நோக்கியவனாக,

    அன்புடன்
    இறை நேசன்

    By இறை நேசன் on Aug 26, 2006

  20. பதிவர் இறைநேசன் (அல்லது இறைநேசன் என்ற பதிவர் பெயரிலே எழுதிய பதிவர்):

    ஏழாவது தடவையாக, இப்போதேனும் புரிந்துகொள்ளப்படும் என்று சொன்னால்,பார்ப்பனர்கள் தலையிலிருந்து பிறந்தார்களா இல்லையா என்ற வாதம் குறித்தும் நாட்டின் மைந்தர்கள், வந்தேறுகுடிகள் பற்றிய ஆய்வு குறித்தும் தமிழ்மணம் சொல்வதற்கு எதுவுமில்லை. ஆனால், விலக்கப்பட்ட பதிவிலே அது தரப்படும் ஒலிப்பிலே பாப்பாத்திகளே முகம் யோனிஎன்றிருந்த சொற்றொடர்கள் குறித்து விலக்கவேண்டுமென முடிவு செய்யப்பட்டது.

    பதிவொன்றைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி. அதை வாசித்து அவசியமான முடிவினை எடுப்போம். விலக்கப்படும் பதிவுகள் குறித்து முறையீட்டஞ்சலிலே அறியத் தர வசதியுண்டு.

    தமிழ்மணம் ஒரு பதிவுத்திரட்டி என்பதால், ஒரு தனிப்பட்ட வலைப்பதிவருக்கு இருக்கும் பொறுப்புணர்வினை விடவும் பதிவுகளோடு செலவுசெய்யும் நேரம் பற்றிய உணர்வினை விடவும் அதிகம் அவதானத்துடன் தன்னிலைப்பாட்டினைப் பேண நடந்துகொள்ளவேண்டியிருக்கின்றது. இந்நிலையினை எல்லாத் தமிழ்மணம் பதிவர்களும் வாசகர்களும் புரிந்துகொள்வார் என்பதிலே இன்னமும் நம்பிக்கை உண்டு. தனிப்பட்ட பதிவர்களுக்கும் குழுக்களுக்குமிடையேயான வலைப்போர்களிலே தமிழ்மணத்துக்கு எதுவிதமான கருத்துநிலையும் இல்லை. தமிழ்மணம், விரும்புவது அறியாமலுங்கூட இத்தகு நிழற்போர்களுக்குத் தான் ஒரு பகடைக்காயாகப் பயன்படாது தன் விதிமுறைகளை எப்படியாகச் செயற்படுத்துவது என்பது குறித்துமட்டுமே.

    நீங்கள் சுட்டிக்காட்டியிருக்கும் “ஆபாசம் பற்றிய வரையறையை எப்படியாக நிர்ணயித்துக்கொள்வது” என்ற வினாவுக்கான விடை மிகவும் நெகிழ்வுத்தன்மையுடையதென்பதைத் தமிழ்மணம் அறிந்தேயிருக்கின்றது. இப்படியான சூழ்நிலையிலே, இயலுமானவரை சுட்டிக்காட்டப்படும் ஒவ்வொரு தனிப்பதிவலகின் மொத்தமான ஒலிப்பினைப் பொறுத்துமே தமிழ்மணம் முடிவினை எடுக்கமுடியும். இதற்கான வரைவிலக்கணத்தினை நீங்கள் எப்படியாக வரையறுக்கின்றீர்களென ஓர் உதாரணத்தினைத் தந்திருப்பீர்களெனில், புரிந்துகொள்ள வசதியாகவிருந்திருக்கும்.

    இப்பதில் தன்னளவிலே முழுமையானதற்றதாக இருக்கலாம். அதனால், இந்தப்பதிலினை முன்னர் சொல்லப்பட்ட தமிழ்மணத்தின் விதிகளோடும் பதிவுகளோடும் பின்னூட்டங்களோடும் சேர்த்து வாசித்து, தமிழ்மணத்தின் நிலைப்பாட்டினைப் பற்றிய விளக்கத்தினைப் பெற்றுக்கொள்வீர்களென நம்பிக்கையுண்டு.

    பி.கு.: நீங்கள் இறைநேசன் என்ற பதிவராக அல்லர் எனத் தனிப்பட்ட முறையீட்டு அஞ்சலிலே ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டப்பட்டால், உங்கள் மேலே அனுமதிக்கப்பட்ட பின்னூட்டமும் அதற்கான தமிழ்மணத்தின் பின்னூட்டமும் அகற்றப்படச் சாத்தியமுண்டு என்பதையும் அறியத் தருகிறோம்.

    தொடரும் உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி

    By தமிழ்மணம் on Aug 26, 2006

  21. அன்புள்ள தமிழ்மணம் நிர்வாகி அவர்களுக்கு,

    முதற்கண் சிரமமெடுத்து எனக்காக நீண்ட ஓர் பதிலை தந்தமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதன் மூலமாகவே மேற்கண்ட பின்னூட்டம் நான்(இறை நேசன்) போட்டது தான் என்பதையும் உறுதி செய்கிறேன்.

    //பதிவொன்றைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி. அதை வாசித்து அவசியமான முடிவினை எடுப்போம்.//

    நான் சுட்டிக்காட்டிய பதிவு என் பதிவே. ஆனால் நான் தங்களிடம் விளக்கம் கோரியப்பதிவு அதனைக் குறித்தல்ல. ஒருமுறைகூட என் பின்னூட்டத்தை கவனிக்கவும்.

    //இப்பதிவில் சுட்டிக்காட்டப்படும் பதிவரின் ஆபாசமான கருத்துக்கள்/ஆலோசனைகள் கூறும் பதிவுகளைக் குறித்து தங்களின் எண்ணவோட்டம் என்ன என்பதையும் நான் அறிய விரும்புகிறேன்.//

    அப்பதிவில் கருப்பொருளாகக் கொள்ளப்படும் பதிவரின் பதிவைக் குறித்தே தங்கள் கருத்தென்ன என்று கேட்டிருந்தேன்.

    அது ஆபாசமான பதிவல்ல என்று தாங்கள் கருதுகின்றீர்களா?

    ஒட்டுமொத்தமாக பெண்களை இழிவுபடுத்தும் முகமாக எழுதப்பட்ட அப்பதிவு இளம்சமுதாயத்தை தவறான பாதைக்கும் இட்டு செல்கிறதே?

    இதனைக் குறித்து தான் தங்களிடம் “தமிழ்மணத்தின்” நிலைபாடென்ன என்று கேட்டிருந்தேன்.

    அதே நேரம் என் பதிவிலும் நீங்கள் ஆட்சேபமானது எனக் கருதுவதை சுட்டிக் காட்டினால் அதனை நீக்குவதற்கு எப்பொழுதும் நான் தயாராகவே இருக்கிறேன்.

    ஆனால் இது போன்று சமுதாயத்தை சீரழிக்கும் முகமான ஆபாசமான கருத்துக்கள்/ஆலோசனைகளைக் கூறும் பதிவுகள் உங்கள் பார்வையில் ஆட்சேபகரமானது/நீக்கப்படவேண்டியது என்றில்லை எனில் எனக்கு கூறுவதற்கு ஒன்றும் இல்லை.

    அன்புடன்
    இறை நேசன்

    By இறை நேசன் on Aug 26, 2006

  22. இறைநேசன் குறிப்பிடும் டோண்டுவின் அந்த பதிவில் எந்த ஆபாசமும் இல்லை.தேன்கூட்டால் மிக சிறந்த பெண்விடுதலை பற்றிய பதிவு என தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவு அது.ஆணாதிக்க கருத்துக்கள் கொண்டோரின் கண்களை அது உறுத்துவதில் வியப்பில்லை.காலம் காலமாக அடிமைப்பட்டு கிடக்கும் பெண்களுக்காக குரல் தரும் டோண்டு போன்ற பெண்விடுதலை போராளிகளை மதவாத பிற்போக்கு ஆணாதிக்க சக்திகள் எதிர்ப்பதில் வியப்பில்லை.

    By செந்திலாண்டவன் on Aug 26, 2006

  23. பதிவர் இறைநேசன்:

    உங்களைப் போன்ற பதிவர்களின் தமிழ்மணம் மீதான அக்கறைக்கும் அதைச் செழுமைப்படுத்துவதற்குமான செயற்பாடுகளிலே பின்னூட்டமூடாக பங்குபெறுதலுக்கும் தமிழ்மணம் நன்றி சொல்கிறது.

    நீங்கள் சுட்டிக்காட்டிய பதிவு குறித்தும் அதைப் போன்று எந்தப்பதிவு குறித்தும் தமிழ்மணத்திலே அக்கறையுள்ள பதிவர்கள் http://www.thamizmanam.com/archives.php ஊடாக, குறித்த எந்தப்பதிவலகுக்கும் பதிவின் பக்கவாட்டிலேயுள்ள வியப்புக்குறி தாங்கிய மஞ்சள்முக்கோணத்தினை அழுத்துவதனூடாக அப்பதிவின் உள்ளடக்கம், ஒலிப்பு, தமிழ்மணம்சார்ந்த தொழில்நுட்பச்சிக்கல் குறித்த உங்கள் கருத்துகளையும் முறையீடுகளையும் தமிழ்மணம் பதிவு நிர்வாகிகளுக்கு அனுப்பி வைக்கமுடியும். இதனை உங்கள் பெயர், தொடர்பு கொள்ளக்கூடிய மின்னஞ்சல் முகவரியுடன் செய்யலாம். இதனால், உங்களை உடனுக்குடன் தொடர்புகொள்ளவும் உங்கள் பெயரினைப் பிறர் பயன்படுத்தாதிருப்பதைத் தமிழ்மணம் உறுதிசெய்துகொள்ளவும் உதவும்.

    நீங்கள் சுட்டிக்காட்டியிருக்கும் மலர்கள்: எயிட்ஸ் பரவ இவைகள் தான் காரணம்! பதிவு, அவருடைய சொந்தக்கருத்தாக இல்லை என்பதால், பதிப்புரிமை காரணமாக அவர் அதைக் கருத்திலேயெடுக்கவேண்டுமென்பதே தமிழ்மணத்தின் முக்கியமான கவனத்துக்குரியதாகின்றது. இதற்காக பதிப்புரிமையினை அவர் கொண்டிருக்கின்றாரென்றே தமிழ்மணம் நம்புகின்றது. அதன்விளைவான பாதிப்புகளுக்கு அவரே பொறுப்பாவார் என்பதை இங்கே மிகவும் தெளிவாக இங்கே சுட்டிக்காட்டவிரும்புகிறோம்.

    ஒரு மத நம்பிக்கை கொண்டவர் இன்னொரு மத நம்பிக்கைமீது எப்படியாகப் பதிவு போடலாம் விடலாமெனக் கண்காணிப்புக்காவலாராக நடந்துகொள்வது தமிழ்மணத்தின் பொறுப்புகளிலே ஒன்றல்ல.

    ஆனால், பொதுவாக, ஒரு பதிவு விலக்கப்படவேண்டியதா எனச் சுட்டிக்காட்டப்படும்போது, தமிழ்மணம் அதிலே முன்னைய விலக்கப்பட்ட பதிவலகுகள் குறித்த விபரங்களைப் பார்வையிடும்வண்ணம் கேட்பதும் அதன்படி குறித்த பதிவலகின் பதிவரினது விளக்கத்தினைக் கேட்பதும் முறையான விலக்கத்துக்கு முன்னான முன்னடவடிக்கைகளெனக் கருதுகின்றது. பதிவரின் பொறுப்புணர்வும் பதிவுகுறித்த விளக்கத்திலும் பொதுவறம் சார்ந்த செயற்பாட்டிலும் நம்பிக்கை கொண்டே இம்முன்னடவடிக்கைக்கு ஒரு சந்தர்ப்பம் அளிக்கப்படுகின்றது.

    அதனால், “எயிட்ஸ் பரவ இவைகள் தான் காரணம்!” பதிவின் பதிவாளருக்கும் அதற்கான விளக்கத்துக்குரிய ஒரு சந்தர்ப்பத்தை வழங்கத் தமிழ்மணம் விரும்பும். தமிழ்மணத்தின் நெறி சம்பந்தப்பட்ட விதி, விளக்கங்களைக் கருத்திலேயெடுத்து விலக்கப்பட்ட விடாதுகருப்புவின் பதிவினை முன்னுதாரணமாக வைத்து, மலர்கள் பதிவின் “எயிட்ஸ் பரவ இவைகள் தான் காரணம்!” பதிவினை விலக்கவேண்டுமா இல்லையாவென அதன் பதிவாளர் இறைநேசனே தீர்மானித்து தமிழ்மணத்துக்கு இங்கே சில நாட்களுக்குள் அறியத் தந்தால் தமிழ்மணத்தின் தீர்மானமெடுக்கும் நிர்வாகச்செயற்பாடுகளை இலகுவாக்கவும் பதிப்பாளிகளின் தனிப்பட்ட கருத்துச்சுதந்திரத்தினையும் தீர்மானமெடுக்கும் தகமையினையும் நிலைநாட்டியதாகவுமமையும்.

    தொடரும் உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி

    By தமிழ்மணம் on Aug 26, 2006

  24. இந்த விவாதங்கள் பதிவுகள் நீக்குதல் ஏன் இந்த பதிவை நீக்கவில்லை, அந்த பதிவை நீக்கவில்லை என்ன அளவுகோள் அது இது என்று விவாதிப்பதிலும் அது தொடர்பாக விளக்கமளிப்பதுவும் தமிழ்மண நிர்வாகிகளின் நேரத்தை விழுங்கும், மேலும் எல்லாவற்றிலும் வெளிப்படையாக செயல்படவேண்டுமென்கிற அளவிற்கு என் போன்ற சில(கவனிக்க சில என்கிற பதத்தை பயன்படுத்தியுள்ளேன்) பதிவர்களுக்கும் என் போன்ற சில வாசகர்களுக்கும் முதிர்ச்சியில்லை என்ற நிலையில் இது போன்ற விளக்கங்கள் விவாதங்கள் எத்தனை தூரம் தேவை என்பது எனக்கு புரியவில்லை…

    தமிழ்மணம் எல்லாவற்றிலும் மிகவெளிப்படையாக செயல்படுகிறேன் அல்லது செயல்படவேண்டுமென்ற அளவிற்கு தமிழ்மணத்திற்கு எந்த கட்டயாமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை…

    மேற்கூறியவை என் கருத்துகள் மட்டுமே, இதை தமிழ்மணநிர்வாகம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதும் இல்லாததும் அவர்களின் விருப்பம்.

    நன்றி

    By குழலி / Kuzhali on Aug 26, 2006

  25. பதிவர் குழலி:

    நேரச்செலவு நிர்வாக அழுத்தம் தொடர்பாக தமிழ்மணத்தின் நிலையைத் தெட்டத்தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். அதற்கு நன்றி. உங்களைப் போல இன்னும் பதிவர்கள், வாசகர்கள் பலர் புரிந்துகொள்ளவேண்டுமேயென்றுதான் இத்துணை முயற்சி தமிழ்மணம் செய்கிறது. தான் வரையறுத்துக்கொண்ட தன் விதிகளுக்கமையச் செயலாற்றும் தமிழ்மணம் தன் முடிவுகள் எப்போதும் எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாதென்பதை அறிந்திருக்கிறது.

    ஆனால், விதியின்படி அவசியமற்றபோதுங்கூட, தமிழ்மணம் தன் பயனாளிகளுக்கு அறத்தின்பேரிலே ஒரு முறை விரிவான விளக்கமும் எழும் வினாக்களுக்கு விடைகளையும் தந்து தெளிவுபடுத்த விரும்பியது. அதுவே ஒவ்வாத பதிவுகளை நீக்குதல் பதிவுகளின் நீட்சிக்குக் காரணமானது.

    தனிப்பட்டவர்களிடையேன தொடர்ச்சியான பிணக்குகளுக்கும் கருத்துவேறுபாடுகளுக்கும் இடையே தமிழ்மணம் புகுவதில்லை, அக்கறை கொள்வதில்லை என்பதைத் தெளிவாக அறிந்துகொண்ட பதிவர்களினாலே தமிழ்மணத்தின் செயற்பாடுகளை முற்றாகப் புரிந்துகொள்ளமுடியும்.

    தமிழ்மணத்துக்கு இப்படியான பதிலிறுக்கும் தேவை மிகவும் அரிதாகவே ஏற்படுமென்ற நம்பிக்கையுண்டு. நேரச்செலவு, நிர்வாகச்செயல்விரயம் என்பனவற்றினை கருதி அடிக்கடி இப்படியான விளக்கப்பதிவுகள் தமிழ்மணம் அறிவிப்புகள் பதிவிலே தோன்றமாட்டா.

    இப்பதிவிலே, விலக்கப்படும் பதிவுகள் குறித்துச் சொல்ல வேண்டிய விளக்கங்களைச் சொல்லிவிட்டதாகத் தமிழ்மணம் கருதுகின்றது. இனி வரும் பதிவர்களின் பின்னூட்டங்கள் இப்பதிவுக்குச் சம்பந்தமிருக்கும்நிலையில் மட்டும் வெளியாகும். தமிழ்மணம் வரும் எப்பின்னூட்டத்துக்கும் இப்பதிவிலே பதிலளிக்க முடியாததற்கு முன்னரே வருத்தம் தெரிவித்துக்கொள்கிறது.

    தொடரும் உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.

    By தமிழ்மணம் on Aug 27, 2006

  26. புதிய தமிழ்மணம் நண்பர்களுக்கு

    வேர்ட்பிரஸ் வலைப்பதிவர்கள் சார்பாக ஒரு வேண்டுகோள்!

    இங்கே

    http://akaravalai.blogspot.com/2006/08/blog-post_28.html

    By வலைஞன் on Aug 28, 2006

  27. உங்கள் முடிவு எதைப் பொறுத்து தீர்மானிக்கப் படுகிறது.

    அதாவது , கீழ்கண்ட பதிவு மாதிரி வஞ்சப்புகழ்ச்சி மாதிரி இருந்தால் என்செய்வீர் தமிழ்மணத்தாரே!
    http://maricair.blogspot.com/2006/12/blog-post_06.html
    இவரது மற்ற பதிவுகளும் ரசிக்கும்படி இல்லை.

    இதுவே இன்றைய இந்தியநாட்டின் இறையாண்மை…

    எனது வேண்டுகோள்,
    ஒரு பதிவர் ஒரு பதிவை தவறாக,இல்லையெனில் சிலருக்குப் பிடிக்காத கருத்தை கூறினால், அவர்கள் அனுப்பும் மின்னஞ்சல் மீதா நடவெடிக்கை எடுப்பீர்கள்..
    ஏன் அந்தப் பதிவை மட்டும் உடனே மட்டறுக்கக் கூடாது.

    உங்கள் பின்னூட்டத்தின் அடிப்படையில்(” புதுப்பிக்க: 233 நொடிகள் ” )செயல்படும் தொழில்நுட்பத்தின் காரணமாக பின்னூட்டச் சண்டை வளைகிறது என்பது என் கருத்து.

    மொத்தமாக இன வேறுபாடுகளின்றி தமிழ் வளர பாடுபடுவது உங்கள் நோக்கமெனில் எங்கள் ஆதரவும் வாழ்த்துக்ளும் என்றும் உண்டு.

    நன்றி.

    By thamzhili on Dec 6, 2006

  28. அதெல்லாம் சரி.
    இந்து மதத்தில் உள்ளோர் யாரும் இஸ்லாத்தை தாக்கலே!
    ஆனா, இஸ்லாம் வழியிலே போறவுங்க நக்கலா எழுதி எங்க மனசு நோகுறது எந்த விதத்தில நியாயம்? நீங்களே சொல்லுங்க.

    By காளையன் on Dec 6, 2006

  29. நீங்கள் ஒரு “objectionable content flag” வசதி செய்தீர்கள் எனில் தனிப்பட்டவர்கள் ஒவ்வொருவராக கொடுக்கும் complaintக்கு பதில் ஒரு குழு அல்லது பெரும்பாண்மையினரின் அந்த குறிப்பிட பதிவை பற்றிய விருப்பம் நீங்கள் அறிந்துகொள்ளமுடியும்.

    If the number of flags raised gone over the your needed request then you can decide, instead of depanding on each person complaints.

    By நாடோடி on Dec 6, 2006

  30. அன்புள்ள தமிழ்மணத்தாருக்கு

    மதங்கள் குறித்த ஆரோக்கியமான விவாதங்கள் வரவேற்கப்பட வேண்டும். எனினும் அதில் ஆபாசமான காழ்ப்புடன் கூடிய கருத்துகளும் பின்னூட்டங்களும் வைத்து சிலர் தமது ஆழ்மன வக்கிரத்தைப் பொதுவில் வைப்பது அவ்வளவு நல்ல போக்காகத் தெரியவில்லை.

    எழில் என்ற பெயரில் எழுதுபவர் வேண்டுமென்றே http://ezhila.blogspot.com/2006/12/blog-post_05.html இந்தப் பதிவில் அநாகரிகமான பின்னூட்டம் அனுமதித்து வைத்துள்ளார். இது போன்ற பதிவர்கள் ஆரோக்கியமான விவாதத்திற்கு ஊறு விளைவித்து விவாதம் வேறு திசையில் பயணிக்க ஏதுவாகிறது. (சிலரது நோக்கம் அதுவே ஆயினும்)

    சம்பந்தப் பட்ட பதிவருக்கு இதனைத் தெரியப் படுத்தி நீக்கச் சொன்னால் விவாதங்கள் சுமுகமான திசையில் நடக்க தமிழ்மணம் பாலம் அமைத்ததாய் இருக்கும்.

    நன்றி.

    By அட்றா சக்கை on Dec 6, 2006

Post a Comment